"எல்லாம் அமேலியாவோட திறமை தான். ஓவியக்கலையோட கற்பனை வளமும் இருக்கிறதால வித்தியாச வித்தியாசமா யோசிக்குறா"
வசந்த் அமேலியாவின் முகத்தைப் பார்த்தான். அவளது திறமைக்கு சரியான வாய்ப்பு அமையவில்லையோ என அவனுக்கு தோன்றியது. அமேலியா மட்டும் ஈராக்கில் பிறக்காமல் இருந்திருந்தால் அவளது திறமை போற்றப்பட்டிருக்கும் என அவன் எண்ணினான்.
"சரி, அப்பாவ இளமையா வரஞ்சதுக்கு அமேலியாவுக்கு என்ன செய்ய போறிங்க?" என்றான் வசந்த்.
எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
"என்ன அப்பா செய்யலாம்?"
"என்னை கேட்டா? நீங்க தான் புதுசு புதுசா சொல்லுறிங்க"
"நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?"
எல்லோரும் வசந்தை நோக்கினர்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
"நாம எல்லோரும் சேர்ந்து ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாமே"
"நல்ல யோசனை தான். ஆனா அமேலியாவ தனியா விட்டுட்டு எப்படி போறது?" என கேட்டாள் மேகலா.
"அவளுக்கு தானே விருந்து. அவ இல்லாம எப்படி?"
நாராயணனும் மேகலாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
"இது தான் நல்ல யோசனையா?" என்றார் நாராயணன்.
"ஆமாப்பா"
"நீ சொன்னது போல நடந்துக்கிட்டா நமக்கு ஜெயில்ல தான் விருந்து நடக்கும்"
"பக்கத்துல உள்ள சின்ன ஹோட்டல் தான்ப்பா. அந்த பக்கம் போலிஸ் பெரும்பாலும் வரமாட்டாங்க"
"நாங்க அந்த இடத்துக்கு வரமாட்டோம்னு போலிஸ்காரங்க உங்கிட்ட சொன்னாங்களா?"
"எனக்கு கூட இந்த யோசனை சுத்தமா பிடிக்கல" என்றாள் மேகலா.
"பயந்தா எல்லாத்துக்கும் பயந்துட்டு தான் இருக்கணும். அமேலியாவுக்கு அக்கா ட்ரெஸ் போட்டுட்டு கூட்டிட்டு போனா யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. யார் நம்மள கேள்வி கேக்க போறாங்க?"
எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
"நாம குடும்பத்தோட வெளிய போய் சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு? இப்போ என்ன, அமேலியாவ கூட்டிட்டு போகக்கூடாது அவ்வளவு தான? சரி வாங்க, அவளை விட்டுட்டு போகலாம்"
நாராயணன் முகாவாய்கட்டையை மெதுவாக தடவினார். அமேலியா வரைந்த ஒவியத்தையும் அமேலியாவையும் நோக்கினார். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என அமேலியாவுக்கு புரியவில்லை. அமைதியாக, என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்தாள்.
"அந்த ஹோட்டலுக்கு போக எவ்வளவு நேரமாகும்?" நாராயணன் கேட்டார்.
"கார்ல போனா பத்து நிமிஷம் தான்ப்பா"
"ஒரு மணி நேரத்துக்குள்ள வீட்டுக்கு வந்திட முடியுமா?"
"அதுவே அதிகம்"
"சரி அமேலியாவ தயார்படுத்துங்க". நாராயணன் அரைமனதோடு சொன்னார்.
தொடரும்...
{kunena_discuss:983}