தொடர்கதை - தாரிகை - 22 - மதி நிலா
வருடம் : 2005..!!
மனிதன் அவசரவேளையில் எடுக்கும் முடிவுகள் யாவும் சரியானதாக இருக்குமென்று சொல்லிவிட முடியாது அல்லவோ..??
தரண்யன் அப்போழுத எடுத்த முடிவும் அப்படித்தான்..!!
என்னவோ அன்று காலையிலிருந்து நடந்துகொண்டிருந்ததெல்லாம் அப்படியொரு சோர்வையும் விரக்தியையும் கொடுத்திருக்க.. இன்ஸ்டன்டாய் இவை அனைத்திற்கும் தற்கொலைதான் தீர்வென்று திடமாய் நம்பியது அவனுள்ளம்..!!
இந்த உலகைவிட்டுப் பிரிந்துவிட்டால் ஏச்சுக்கள் பேச்சுக்கள் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணம் வேறு திண்ணமாய்..!!
எதை பற்றியும் யோசிக்கும் நிலைக்கூட இல்லை அவனுக்கு.. ஒரே சுழலில் சுழன்றுகொண்டிருந்தது அவன் மனது..!!
தூரத்தில் கேட்கும் ரயிலின் ஓசை வேறு அவனுக்கு அந்நேரத்தில் அழகானதொரு யோசனையை அளித்திருக்க.. தீர்க்கமாய் தீர்மானித்திருந்தான்..!!
புதியதொரு விடுதலை எண்ணம் வேறு.. இனி யாரும் தன்னை கேள்விகளாலும் கேலிகளாலும் தொடரமுடியாது அல்லவா..??
ரயிலின் பாதையில் சென்று சிலையாய் நின்றுவிட்டான்..!!
பயம் நிரம்பி வழிந்திடும் நிலைதான்.. இருந்தும் அவன் அசைந்திடவில்லை.. தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் உணர்வு மேலோங்கி இருந்ததால் அப்படியே ரயிலின் வரவிற்காய் காத்திக்கிடக்கலானான் அவன்..!!
ஒரு சில நொடிகள்..!! இதோ அவனை நெருங்கிவிட்டிருந்தது ரயில்..!!
விழிகள் இரண்டும் தானாக மூடிக்கொண்டது தரணுக்கு.. தந்தை தாய் என அனைவரின் முகமும் வந்துபோக.. தப்பு தப்பு என்று அவன் இதழ்கள் முனுமுனுத்துக்கொள்ள பயத்தினில் கால்கள் அசைந்துகொடுத்திடவில்லை அவனுக்கு..!!
முட்டாள்த்தனமாய் எடுக்கும் தற்கொலை முடிவின் இறுதிக்கட்டத்தில் ஒருவனிடம் உதித்தெழும் ஞானோதயம்தான்..!!
இறப்புக்கும் வாழ்விற்குமான நூலிழையில் அவன் அல்லாடிட அவனைக் கடந்து சென்றது அந்த ராட்சச ரயில்..!!
அதன் வேகத்தில் அடுத்த ட்ராக்கில் தள்ளிப்போய் விழுந்திருந்தான் தரண்..!!
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
நெற்றியிலிருந்தும் கைகால்களிலிருந்தும் வீரிட்டுப்பாயும் ரத்தத்துளிகள் எரிச்சலையும் வலியையும் உண்டாக்கிட தான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறோம் என்ற நினைப்பிலும் அவன் எழுந்து நின்றிட பட்டென அவன் கன்னத்தில் விழுந்தது அடி..!!
பொறி பறக்குமே.. அப்படியிருந்தது அதன் வலி..!!
உடல் அடி வாங்கியிருந்ததில் ஏற்கனவே நிலையில்லாமல் தடுமாறிய உடல் மேலும் தள்ளாட அவனைப் பிடித்து இழுத்தபடி ஒரு இருக்கையில் அமரவைத்தது பிஞ்சு விரல்கள்..!!
“ரொம்ப வலிக்குதா..??”, என்றவண்ணம் அதன் விரல்கள் தரணின் நெற்றியைத் தொட்டிட.. அப்பொழுதுதான் யாரென நிமிர்ந்து பார்த்தான் அவன்..!!
தன் முன்னே அழுக்கேறிய சட்டையுடன் முகத்தில் ஏற்றிவைத்த புன்னகையுடன் நின்றிருந்த அந்த சிறுவனைக் கண்டத்தும் அத்தனை ஆச்சர்யம் தரணுக்கு..
“யாராம் இவன்..?? என்னை அடிக்க இவனுக்கு என்ன உரிமை..??”, மனதில் சட்டென கேள்வி முளைத்திருந்ததுதான்.. இருந்தும் தன் மீது தவறிருக்க அவனைக் கடிந்துகொள்ளமுடியா நிலை..!!
மௌனமாகவே அந்த சிறுவனைப் பார்த்திருந்தான் தரண்யன்..!!
அவனை அளவிட்டபொழுது பத்து வயதைக்கூட அவன் தொட்டிருக்கமாட்டான் என்று தோன்றிட, “யார்டா நீ..??”, என்பதுபோலத்தான் பார்த்திருந்தான் தரண்..!!
அந்த சிறுவனின் பார்வையும் அப்படியே தரணின் பார்வையைப்போலவேதான் இருந்தது.. மற்றவனை எடைபோட்டபடி..!!
இருவரின் பார்வைகள் ஒன்றோடொன்று கூர்மையாய் நொடிக்கொருதரம் தொட்டுத்தொட்டுச் சென்றுகொண்டிருக்க.. இருவருக்குமிடையில் அவ்வளவு மௌனம்..!!
“ரொம்ப வலிக்குதா..??”, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டிருந்தான் அச்சிறுவன்..!!
“ப்ச்.. இல்லை..”, என்ன தோன்றியதோ அவனுக்கு பதில்தந்தவன், “யார் நீ..?? இந்நேரத்துல இங்க என்ன பண்ற..??”, என்று கேட்டிட..
“நா.. நா..ன்..”, இப்பொழுது தடுமாற்றம் மற்றவனிடம்..
“ஹ்ம்.. நீதான்.. யார் நீ..??”, இப்பொழுது அழுத்தமாய் கேட்டிருந்தான் தரண்யன்..
“நிஷா..ந்..த்.. ப்ச்.. இ..ல்லை இல்..லை.. நி..ஷா..ர்..த்தி..கா.. நிஷார்த்திகா..”, முதலில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தபொழுதிலும் தீர்க்கமாகவே வெளிப்படுத்தியிருந்தாள் நிஷார்த்திகா..
“நி..ஷா..ர்..த்தி..கா..வா..??”, குழப்பத்துடன் இவன் கேட்டுவைக்க..
“நிஷார்த்திகாதான்.. நான் பையனில்லியாம்.. என்னவோ சொன்னாங்களே..??”, சற்று யோசித்தவள், “ஹான் நியாபகம் வந்திருச்சு.. *********.. எங்க அம்மாதான் சொல்லுச்சு.. அதுதான் என்னை ரயிலேத்திவிட்டுச்சு.. எங்கயாவதுபோய் பத்திரமா இருந்துக்கோ.. இல்லைன்னா உன்னை உங்க அப்பாவே கொன்னாலும் கொன்னுடுவாருன்னு..”, என்றவளின் குரலில் சோகம் என்பது சுத்தமாக இல்லை.. செய்தி சொல்லும் பாவம் மட்டும்..!!