(Reading time: 22 - 43 minutes)

அதற்குள் மித்ரா நிதானமாகவும், மைதிலி, கௌசல்யா இருவரும் அவளிடம் சென்று தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

அதோடு ஷ்யாமிடம் சொல்ல முயற்சி செய்த போது, அவன் மீடிங்கில் இருப்பதாக சொல்லவே, முடித்ததும் அவனைப் பேசச் சொன்னார்கள்.

கௌசல்யா தன் மகளான சபரியிடம் கூற, சபரியும், மித்ராவின் பாட்டியும் உடனே கிளம்பி வந்துவிட்டார்கள்.

இரு வீட்டிலும் ஆண்களின் வரவிற்காகக் காத்து இருந்தனர் பெண்கள். முதலில் முரளி வர, அவனிடம் விஷயம் சொல்லப் பட்டு அவரும் தன் மகளைப் பார்க்க வந்தார்.

பின் ராம், ஷ்யாம் இருவரும் வர, அவர்களிடமும் சொல்லப் பட்டது. ஷ்யாம் தன் மனைவியைப் பார்க்கத் தங்கள் அறைக்குச் சென்றான்.

அவளின் வின்னியோடு மித்ரா அமர்ந்து இருக்க, ஷ்யாம் வரவும் மித்ரா வெட்கத்தோடு தலைக் கவிழ்ந்தாள்.

ஷ்யாம் அவளை அணைத்து

“ரித்துக் குட்டி, உன் வின்னிக்கு இனிமேல் வேலை நம் வாரிசுகளிடம் தான். உன்னிடம் இல்லைப் புரிந்ததா? “ என,

“போங்க ஷ்யாம்” என்று அவனிடத்தில் மறைந்து கொண்டாள்.

அன்று எல்லோரும் இரவு உணவு முடிந்து கிளம்பவும், மித்ராவை ரெஸ்ட் எடுக்க அனுப்பி விட்டு, ஷ்யாம் தன் பெற்றோர் அறைக்குச் சென்றான்.

அங்கே மைதிலி , ராமிடம் சுமித்ராவின் குறும்பு பற்றிக் கூறிக் கொண்டு இருக்க, ஷ்யாம் அவர்களிடம் பேசினான்.

“அம்மா, ஏன் சுமிய பற்றிக் கவலைப் படறீங்க ?

“ரொம்ப குறும்பு பண்றாடா. அவள் எப்படி ஒரு குடுமபத்தில் போய் வாழப் போறாளோன்னு கவலையா இருக்கு”

“ஏன்மா , அவள் படிப்பு முடியலையே. அதற்குள் உங்களுக்கு ஏன் இந்தக் கவலை?

“அது இன்னும் கொஞ்ச நாளில் முடிந்து விடும். அதற்குப் பின் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும் தானே”

“அப்படின்னா நம்ம வரையில் அவள் கல்யாணம் பற்றி யோசிக்க ஆரம்பிச்சிட்டோம் இல்லையா? எனக் கேட்டான்

“ஆமாமா. அப்பா கிட்டே ஏற்கனவே சொல்லிட்டுத் தான் இருந்தேன். “ என்று மைதிலியும் கூறினாள்.

“சரிம்மா, அப்போ நம்ம சுமித்ராவிற்கு சேகரக் கேட்டுப் பார்க்கலாமா? என்று கேட்டான்.

ராம் , மைதிலி இருவரும் யோசனையோடு “சுமித்ரா, சேகர் இருவரும் விரும்புகிறார்களா? என்று கேட்டனர்.

ஷ்யாம் “இல்லைமா. ஆனால் சேகருக்கு விருப்பம் இருப்பதாக சுமித்ராவிடம் சொல்லி இருக்கிறான். அவள் நம்மிடம் பேசச் சொல்லியிருக்கிறாள்.” என்றான்.

“ஓஹோ. சேகர் வீட்டில் எல்லோரும் டாக்டர் தானே. அவர்களுக்கும் விருப்பம் இருக்கா?

“சேகர் விருப்பம் என்றால், அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்றான்”

“ஹ்ம்ம் . சேகர் தெரிந்த பையன். அதோடு சுமித்ராவிற்கும் அவனோடு பழக்கம் இருப்பதால், அவனின் குணம் நன்றாகத் தெரியும். ஆனால் அவளுக்கு விருப்பமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும்”

“அம்மா, விருப்பம் இருக்கப் போய்த்தானே நம்மிடம் பேசச் சொல்லியிருக்கிறாள். நான் சேகரிடம் பேசி,அவன் பெற்றோரை நம்மிடம் பேசச் சொல்கிறேன். மற்ற ஏற்பாடுகள் எல்லாம் செய்யலாம்” என்று கூறவே, ராம் , மைதிலி இருவரும் ஒத்துக் கொண்டனர்.

ஷ்யாம் தங்கள் அறைக்குச் சென்று மித்ராவிடம் சேகர் சுமித்ராப் பற்றிச் சொல்ல, சந்தோசத்தில் மித்ரா துள்ளிக் குதித்தாள். ஷ்யாம் அவளை அடக்கி, அவள் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கிளாஸ் எடுத்து முடிக்க, மித்ராவோ தூங்கியேப் போயிருந்தாள்.

வீட்டில் எல்லோரும் சுமித்ரா இல்லாத நேரம் பேசி, சேகர் வீட்டினரைப் பெண் பார்க்க வரச் சொல்லியிருந்தார்கள்.

இதற்கு இடையில் மித்ராவை டாக்டரிடம் அழைத்துச் சென்று , அவளின் கர்ப்பத்தை உறுதி செய்து இருக்கவே, வீட்டில் இரட்டிப்பு மகிழ்ச்சிப் பொங்கியது.

ஒரு விடுமுறை நாள் காலையில் சுமித்ராவிடம் அன்று மாலை அவளைப் பெண் பார்க்க வருவார்கள் என்று சொல்ல, சுமித்ராவோ பேய் முழி முழித்தாள்.

அவளைப் பொறுத்தவரை சேகரை ஷ்யாமிடம் பேசச் சொல்லிய பிறகு, தானாக நடந்து விடும் என்று நினைத்தாள். சேகரிடம் கூட அதைப் பற்றிப் பேசவில்லை.

இன்றைக்கு வீட்டில் இப்படிச் சொல்லவும் தான் சேகர் நினைவே வந்தது. மனதுக்குள் “ஐயோ, அந்த சிடுமூஞ்சி சிங்காரம் இன்னும் ஷ்யாம் கிட்டே பேசலியா? இப்போ எப்படிக் கேட்கறது “ என்று முழித்தாள். அதோடு அவளுக்கு லேசா ஒரு சந்தேகம் வேறே வந்துவிட்டது “ஒருவேளை நம்ம பெர்போர்மான்ஸ் பார்த்து டாக்டர் பயந்துட்டாரோ” என்று எண்ணினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.