தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 06 - ஸ்ரீ
“பூலோகம் என்பது, பொடியாகிப் போகலாம்,,
பொன்னாரமே, நம் காதலோ, பூலோகம் தாண்டி வாழலாம்.
ஆகாயம் என்பது, இல்லாமல் போகலாம்,,
ஆனாலுமே, நம் நேசமே, ஆகாயம் தாண்டி வாழலாம்..
கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சுக் காதலே
கறை மாற்றி நாமும் மெல்ல, கரையேற வேண்டுமே
நாளை வரும், காலம் நம்மை, கொண்டாடுமே...
தாஜ்மகால் தேவையில்லை,
அன்னமே, அன்னமே..காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே..”
டெல்லி விமான நிலைய வாசலை அடைந்தவன் தனக்கான பெயர்ப்பலகையோடு காத்திருந்த நபரிடம் செய்கை காட்டியவாறு முன்னே நடந்தான்.அவன் பெட்டிகளை வாங்கி காரில் அடுக்கியவர் காரைக் கிளப்ப எத்தனித்து அவனைப் பார்க்க சிறு புன்னகையோடு தலையசைத்தான்.
மொபைலை ஆன் செய்தவன் ஆயிரம் முறை இருவரும் கூறியிருந்தபடி ரீச்ட் சேப்லி என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அதே புன்னகையோடே வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
இப்போதெல்லாம் இந்த புன்னகை உதட்டில் நிலையான ஒன்றாக மாறிவிட்டிருந்தது அவனிடத்தில்.ரேஷ்வா ஓரளவு மேல்தட்டு குடும்பத்தைச் சேர்ந்தவன்.தாயும் தந்தையும் சில பல காரணங்களால் பிரிந்துவிட்ட போது அவனுக்கு வயது 15.
இரண்டும் கெட்டான் வயது என்பார்களே ஒரு குழந்தைக்கு தாய் தந்தை இருவரின் அரவணைப்பும் தேவைப்படும் பருவம்.இரண்டுமே கிடைக்காமல் போனதே வாழ்வின் முதல் சரிவு அவனுக்கு.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அவனது தந்தையின் மீதான கோவம் அவரறியாமல் ரேஷ்வாவிடம் காட்டப்பட்டது அவனது தாயால்.கூட்டுக்குள் அடைபட்ட பறவையாய் ஒடுங்கிப் போனான்.பள்ளி கல்லூரியிலும் அப்படியே நட்பு என்ற ஒன்றே கிடையாது.ஆனால் நன்றாகப் படித்தான்.இதர கலைகளிலும் ஆர்வமிருந்தது.
ஆனால் அனைத்தும் இயந்திர கதியில் தான்.தன் திறமைகளை ஊக்குவிக்கவோ தன்னிடம் கனிவு காட்டவோ ஆள் இல்லாமல் போனது அவனை எந்த வெற்றியையும் முழுதாய் சுவைக்க விடவில்லை.
அதன் பின் தனக்கான துறையாய் சினிமாவைத் தேர்ந்தெடுத்தான்.இத்தனை வருடம் கிடைக்காத பாராட்டு கைத்தட்டல் அனைத்தையும் அதில் பெற முடியும் என்று நம்பினான்.அது போலவே இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் மக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.பேர் புகழ் பணம் என அனைத்தும் நினைத்ததை விட பல மடங்காகவே கிடைத்தது.
ஆயிரம் ஆயிரம் வாழ்த்துகள் விருதுகள் தரையில் நடந்ததை விட வானத்தில் பறந்தான் என்று தான் கூற வேண்டும்.அதன் பிறகு சொந்த வாழ்க்கையின் பிரச்சனைகள் படங்களும் அவ்வளவாக ஓடவில்லை.நேரம் சரியில்லையோ என்றே எண்ணத் தோன்றியது.
அப்படி ஒரு நாள் குடிபோதையில் ஒரு சிறு வாக்குவாதத்தில் ஈடுபட சோஷியல் மீடியா டீவி நியூஸ் என அனைத்திலும் அவன் பெயர் தான்.உண்மையில் அவன் மீதான தவறு என்பது குறைவே எதிரிபுறத்தில் பேசியவர் தேவையில்லாத வார்த்தைகளை விடவே இவனும் பொறுமை இழந்திருந்தான்.
ஆனால் ஒரு நடிகனாய் இவனையே மொய்த்தனர் அத்தனை பேரும்.தங்களுக்குத் தோன்றுவதை எல்லாம் செய்தியாகப் பரப்பினர்.அந்த ஒரு நிகழ்வை வைத்து அவன் வரலாறு பூகோளம் அனைத்தையும் தோண்டித் துருவி ட்ரெண்டாக மாற்றியிருந்தனர்.
எப்போதுமே நல்லதை விட கெட்டது வேகமாகப் பரவும் என்பதை கண்கூட கண்டான் ரேஷ்வா.அதைவிட கொடுமை ஒவ்வொரு வீடியோவிலும் பதிவிடப்படும் கமெண்ட்கள்.உண்மையில் மனதளவில் நொந்துபோனான்.
அத்தனை கீழ்த்தரமான வார்த்தைகள்..காது கூசசெய்யும் இழி சொற்கள் வெறுத்துப் போனது அவனுக்கு.எங்கு செல்கிறது மனித வாழ்க்கை ஒரு ஆணாய் அவனுக்கே பார்க்க சகிக்காத வார்த்தைகள் அத்தனையும் இதை எத்தனை பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் பார்க்க நேரிடும்.அதன் விளைவு எப்படி இருக்கும்?எதைப் பற்றியும் கவலையில்லை யாருக்கும்.
நமக்கென ஒரு செல்போனோ கம்ப்யூட்டரோ தடையில்லா இணைய வசதியோடு இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்பது தான் இப்போதைய ட்ரெண்ட்.அடுத்து புதிதாய் செய்தி கிடைக்கும் வரை இவன் தான் அவர்களின் போதைக்கு ஊறுகாய். அதன் பின் இவனைத் தூக்கி போட்டுவிட்டு அடுத்தவனை கழுகாய் கொத்த ஆரம்பித்து விடுவார்கள்.
இதையெல்லாம் நினைத்தவனுக்கு பெரு மூச்சு ஒன்று எழுந்தது.டெல்லியின் போக்குவரத்து நெரிசலைவிட மனதில் நினைவுகள் குமைந்து கிடந்தது.அனைத்துமாய் அவனை பித்து கொள்ளச் செய்தநேரம் எடுத்த முடிவு தான் தற்கொலை.