(Reading time: 28 - 55 minutes)

தனத்தோடு நெல்லூரில் அவர்கள் சென்றது, சிவகுரு மற்றும் புவனா தம்பதியரின் வீடு, சிவகுரு தன்  தொழிலை அங்கேயே அமைத்துக் கொண்டதால் அவர்கள் அப்போது நெல்லூரில் தான் இருந்தனர்.  யாதவியை தன் மகள் என்றே தனம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவளுமே தன் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்துவிட்டவைகளுக்கு வருந்தியவள், தன் குணத்தையும் மாற்றிக் கொண்டு வேலைக்காரியான தனத்தின் மகளாய் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்துக் கொண்டாள்.

ஆனால் சிவகுரு, புவனா குணத்தில் தங்கமானவர்கள் என்பதால் யாதவியை தங்கள் மகள் போலவே கவனித்துக் கொண்டவர்கள், அவள் படிக்கும் வயதில் வீட்டிலிருப்பதை உணர்ந்தவர்கள் அவளின் படிப்பை பற்றி கேட்க, பனிரெண்டாவது முடித்திருப்பதாக கூறினாள்.

அவர்கள் மேலே படிக்க வைப்பதை பற்றி பேச, அவளுக்கும் அதில் ஆசை இருந்தாலும், அவள் சான்றதழ்களில் யாதவி என்ற பெயரை பார்த்து அவளைப் பற்றி தெரிந்துக் கொள்வார்களோ என்று பயந்தாள். அதிலும் தன்னால் தனம் அம்மாவிற்கும் வேலை போய்விட்டால் என்ன செய்வது என்று அவள் கவலை கொள்ள,

தனத்திற்கோ யாதவி நன்றாக படிக்க வேண்டுமென்ற ஆசை உருவாக, அவளின் சான்றிதழ்களை புவனாவிடம் காட்டியவர், "நீங்க நினைக்கிற மாதிரி தேவி நான் பெத்த பொண்ணு இல்லம்மா.. இவ என்னோட தங்கச்சி பொண்ணு, என்னோட தங்கச்சி இப்போ உயிரோட இல்ல.. என் தங்கச்சி புருஷன் பொறுபில்லாதவன், அவன் இவளை நல்லா பார்த்துக்க மாட்டான். அதான் என்னோட கூட்டுக்கிட்டு வந்துட்டேன்.. என் தங்கச்சி பொண்ணுன்னு சொன்னா அவளை சேர்த்துக்க மாட்டீங்களோன்னு என்னோட பொண்ணுன்னு சொல்லிட்டேன்.." என்றார்.

அவர் சொன்னதை கேட்ட யாதவிக்கோ, "அய்யோ என்னோட அம்மா செத்துட்டதா சொல்றாங்களே.. கடவுளே என்னோட அம்மா நல்லப்படியா இருக்கணும்.." என்று வேண்டிக் கொண்டவளுக்கோ எப்போதோ தன் அன்னையின் உயிர் இந்த மண்ணை விட்டு சென்றுவிட்டது, அதற்கு காரணமே தான் தான் என்பதை அவள் அறியவில்லை.

சிவகுரு, புவனாவிற்கு இந்த செய்தி பெரிய விஷயமாக தெரியவில்லை, அதனால் யாதவியை அந்த ஊரிலேயே கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தனர். கல்லூரியில் யாதவி என்றாலும் அவள் வீட்டில் தேவி என்று தான் அழைக்கப்பட்டாள். அப்போது படித்து முடித்துவிட்டு வட மாநிலத்தில் பாலா தற்காலிகமாக வேலை செய்துக் கொண்டிருந்ததாலும், அப்போதெல்லாம் மதுரிமா புதிதாக நடிக்க ஆரம்பித்திருந்தால் தொடர்ந்து அவளுக்கு பட வாய்ப்பு இருந்ததால் நெல்லூருக்கு அடிக்கடி வர மாட்டடாள். எனவே அவர்கள் இருவருமே யாதவி  தனத்தின் மகள் தேவியாக மட்டும் தெரிந்து வைத்திருந்தனர்.

நடந்தவற்றை சொல்லி தான் செய்த தவறுகள் குறித்தும், தன்னால் தான் தன் அன்னை இறந்துவிட்டார் என்பதாலும் யாதவி அழுதுக் கொண்டிருக்க, புவனாவிற்கு அவளை தேற்றுவது பெரிய விஷயமாக இருந்தது. இதில் இவர்கள் பேசிக் கொண்டே இந்த இரவை கழித்துவிட விடிந்தும் விட்டது. அதனால் இனியும் தூங்க முடியாது என்பதால், யாதவியை ப்ரஷாகி வரச் சொன்னவர், அவரும் சென்று ஃப்ரஷாகி யாதவியை கூட்டிக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தார்.

வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை என்பதை உணர்ந்தவர், "தேவி உன்னோட கையால ஒரு காஃபி போட்டு கொடு.." என்று சொல்ல,

"நானா.." என்று அவள் விழி விரிக்க,

"நீதான் இது என்ன கேள்வி.." என்று அவர் கேட்டார்.

"யாராச்சும் ஏதாச்சும் சொல்வாங்கம்மா.." என்று அவள் சொல்ல,

"இது உன்னோட வீடு தானே.. யார் என்ன சொல்லப் போறாங்க.. நான் போய் காபி போட்டா தான் தப்பா தெரியும், அதனால நீயே போடு.. காலையில் எழுந்ததுமே எனக்கு காபி குடிக்கணும்னு தெரியாதா?" என்றவர், அவளை சமையலறைக்கு அனுப்பி வைக்க, அவளும் இருவருக்கும் காபி போட்டுக் கொண்டு வந்தாள். இருந்தும் அவள் பதட்டத்தோடு இருப்பதாகவே அவருக்கு தோன்ற, அவளிடம் நகைச்சுவையாக ஏதேதோ பேசி, அவளை இயல்புக்கு கொண்டு வர, அவளும் சிரித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.