தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 21 - ஸ்ரீ
“யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்...”
ஆத்விக்கின் திருமணம் முடிந்து நான்கு தினங்கள் கடந்திருந்த நிலையில் நேற்றிலிருந்து ரினிஷாவை தொடர்பு கொள்ள முடியாமல் போயிருந்தது ரேஷ்வாவிற்கு.
முதலில் அதை சாதாரணமாய் எடுத்தவனுக்கு ஏனோ நேரமாக ஆக எண்ணங்கள் பலவிதமாய் அலைபாய ஆரம்பித்தன.என்ன செய்வதென புரியாமல் எப்போதடா விடியும் என காத்திருந்து ஜீவிகாவிற்கு அழைத்தான்.
“ரேஷ் என்ன இத்தனை காலையிலேயே?”
“ஜி ரினி உனக்கு கால் ஆர் மெசெஜ் எதுவும் பண்ணினாளா?”
“இல்லையே ரேஷ்..டூ டேஸ் இருக்கும்..பிஸியா இருக்கா போலனு நானும் மெசெஜ் பண்ணல..என்னாச்சு எதுவும் ப்ராப்ளமா?”
“தெரில ஜி..ஆனா எதோ சரியில்லனு தோணிட்டே இருக்கு..அதான் உனக்கு கால் பண்ணேன்..”,என்றவனின் குரலிலேயே அவனது தவிப்பும் துயரமும் அப்பட்டமாய் தெரிந்தது.
“அட இதுக்கெல்லாமா இப்படி ஃபீல் பண்றது இருங்க இப்போவே நான் என்னனு பாக்குறேன்..அந்த புள்ளை பூச்சியை நாலு தட்டு தட்டி என்னனு கேட்குறேன்..ரிலாக்ஸ் ரேஷ்..”,என்றவளுக்குமே குழப்பம் இருந்தாலும் அவனுக்காக எதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணியவளாய் ரினிஷாவின் எண்ணிற்கு அழைத்தாள்.
முழு அழைப்பும் சென்று நின்றது.அதுவே முதல் ஆச்சரியம் ஜீவிகாவிற்கு.ரேஷ்வா முயற்சித்துப் பார்த்து அழைப்பு செல்லவில்லை என்று கூறியிருந்தான்.பின் எப்படி இது சாத்தியம் என்று குழம்பியவளாய் மீண்டும் அழைக்க முயற்சி செய்த நேரம் ரினிஷாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
“ஜி ஐ அம் இன் கேரளா..வீட்டுல ப்ராப்ளம்.ரேஷ் நம்பர் நான் தான் ப்ளாக் பண்ணிருக்கேன்.ப்ளீஸ் ப்ரே பார் மீ..”
மொபைலையே வெறிக்கப் பார்த்திருந்தவளை தோள்தட்டி உயிர்ப்பித்தான் ஜெயந்த்.