தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது
ஓரறிவு தாவரம் முதல் இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணர்வு உண்டு. அன்பில் மகிழ்ந்து, வெறுப்பில் துவண்டு, பயத்தில் துடித்து, கோபத்தில் பொங்கும் தன்மை மனிதனுக்கு மட்டுமல்ல. எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது.
சக ஜீவன்களோடு மனிதன் இணைந்து அவற்றை அரவணைத்து வாழும் வரை மனித குலமும் மேம்படும். ஆனால் எப்போது மனிதன் தன் சுயநலத்திற்காக மற்ற ஜீவன்களின் வாழ்வை கேள்விக்குறி ஆக்குகிறானோ மனித குலமும் கேள்விக்குறி ஆகிவிடும் என்று ஏனோ மனிதன் உணர்வதாக இல்லை.
தான் மட்டும் வாழ வேண்டும் என்று மண்ணில் காட்டை அழித்தான். மரங்களை சாய்த்தான். பறவைகள், விலங்குகளின் உணவையும் உறைவிடத்தையும் பறித்தான். கூடவே கடலையும் கடல் வாழ் உயிர்களையும் அழிக்க முற்பட்டு விட்டான்.
உயிர்ச்சங்கிலியில் தானும் ஒரு அங்கம் என்று ஏனோ மறந்து போனான். சங்கிலி எங்கு அறுபட்டாலும் அழிவு தனக்கும் தான் என்று எப்போது புரிந்து கொள்வான்.
இயற்கை மிகவும் அற்புதமானது. அனைத்து உயிர்களும் ஒரு சமநிலையில் வாழ யுகம் யுகமாக வழி செய்து கொடுத்திருக்கிறது.
உணவுச் சங்கிலி மட்டுமல்லாமல் ஒன்றின் கழிவு மற்றொன்றின் உரமாக சுயசுத்தகரிப்பும் நிகழ்கிறது.
ஆனால் மனிதன் தனது சுகபோக வாழ்விற்காக செயற்கை பொருட்களை கண்டுபிடித்து அதைப் பெருமளவு பயன்படுத்துவதோடு அல்லாமால் கழிவுகள் அனைத்தையும் மண்ணிலே புதைத்து மண்ணை மலடாக்கினான். மண்ணில் இடம் போதவில்லை என்பதால் கடலில் கொட்டி கடல் உலகத்தை அழித்துக் கொண்டிருக்கிறான்.
அதன் வெளிப்பாடு தான் நைலான் கயிற்றில் சிக்கிய ஆக்டபஸ்.
தேன்மொழி மிகச் சிறந்த டைவராக தேர்ச்சிப் பெற்றதும், மரைன் போட்டோகிராபி பயின்றதும் அதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட கடல் பகுதிகள் என்பதால் அது வரை அப்படி ஒரு காட்சியை அவள் கண்டதில்லை.
கடல் வாழ் உயிரனங்களை மனிதர்கள் வேட்டையாடி அழித்து கொண்டு வருகிறார்கள் என்று அறிந்தவள் தான்.
ஆனால் இது என்ன மாதிரியான வேட்டை.
அந்த ஆக்டபஸ் துடித்தது அவள் கண் முன் வந்து கொண்டே இருந்தது.
செந்தமிழின் உதவியால் அவள் பசி, தாகம், அச்சம் ஆகியவற்றில் இருந்து விடுபெற்று விட்டதால் இப்போது அவள் சிந்திக்கலானாள்.