“செந்தமிழ், எனக்கு இப்போ நினைச்சாலும் நடுங்குது. மக்காத செயற்கை பொருளான நைலானை எங்க தேவைக்கு நாங்க பயன்படுத்தினது அந்த ஆக்டபஸ் உயிரை பதம் பாத்திருச்சு. சாரி செந்தமிழ். வெரி சாரி”
செந்தமிழைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அவள் பேசியது செந்தமிழுக்குப் புரிய வாய்ப்பில்லை தான். ஆனால் அவள் சந்தோஷமாக ஓடி வந்து அணைத்துக் கொண்டது, அன்பாக அரவணைத்து பாடியது, இன்னொரு உயிரின் துன்பத்திற்கு தானும் ஒரு வகையில் காரணம் என துடித்தது என அவள் உணர்வுகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டான்.
ஆம். இப்போது அவன் அவளுக்கு வெறும் கடல் வாழ் ஆமை போன்ற உயிரனம் அல்ல. அவளின் தோழன் அவன். யாருமற்ற தனித்தீவில் அவளின் துணைவன் அவன்.
செந்தமிழிடம் பேசிக் கொண்டே அவள் எப்போது தூங்கிப் போனாள் என்று அவளே அறியாள்.
சூரியன் வந்து உறக்கம் போதும் என தட்டி எழுப்பவும் விழித்தவள் அருகில் செந்தமிழ் இல்லாததை உணர்ந்த்தாள்.
“எனக்கு சாப்பிட கடல் தாவரம் எடுத்து வர போயிட்டியா. இதுவே இவ்வளவு இருக்கு. ஹ்ம்ம் நீ சாப்ட்டு வர போயிருப்பாய் அப்படித் தானே. அது வரை நான் உருப்படியா ஒரு வேலை செய்கிறேன்” என்று அங்கே இல்லாத அவளின் தோழனிடம் மானசீகமாக பேசிக்கொண்டவள் மளமளவென்று அந்த வேலையை செய்து முடித்தாள்.
அங்கிருந்த மிக உயரமான பெரிய பாறை மீது ஏறி கையில் இருந்த கடல் தாவரத்தை உதவி என ராட்சச அளவில் ஆங்கில எழுத்துக்களாக அடுக்கினாள்.
காற்றில் தாவரம் அசையாமல் இருக்க சிறு சிறு பாறைகளை அதே எழுக்களின் வரிசையில் அடுக்கினாள்.
“தாத்தா எப்படியும் மீட்புக் குழுவினரை அனுப்புவார். ஒரு வேளை இங்கே மணல் திட்டைப் பார்த்து தாழ்வாக விமானம் பறந்து வந்தால் இங்கு நான் இருக்கிறேன் என்று இது தெரிவிக்கலாம்” தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
அதே வேளையில் அல்டாப்ரா அடோல் பகுதியில் வானிலை சீராகவும் தகவல் கிடைத்த மீட்புக் குழுவினர் அங்கே வந்து சேர்ந்தனர்.
ஆதி தாங்கள் சென்ற திசையை பூமத்திய ரேகையின் குறியீடுகளில் கூற அது தென்மேற்கு திசையில் இருந்ததை உணர்ந்த மீட்புக் குழுவினர் தாத்தாவிற்கும் ஆதிக்கும் நம்பிக்கை தெரிவித்தனர்.