தாத்தா தெளிவாக கூறவும் தேன்மொழி சோர்ந்து போனாள்.
கடல் அலைகளை பார்த்தபடியே அவள் எந்நேரமும் அமர்ந்திருந்தாள்.
பாரீஸில் நடைபெற்ற பேஷன் போட்டியில் கயல்விழி வெற்றி பெற்றதை தாத்தா அவளிடம் மகிழ்ச்சியாக தெரவித்தபோதும் அவள் மனம் துள்ளிக்குதிக்கவில்லை.
ஆதி தாத்தா இருவருமே அதை அறிந்த போதும் கடலில் செல்ல தடை என்பதால் சோர்ந்து இருக்கிறாள் என்றே நினைத்தனர்.
“பாப்பா அவார்ட் விழாவிற்கு வருவாய் தானே” போனில் வாழ்த்துச் சொன்ன தேன்மொழியிடம் வானதி தான் கேட்டாள்.
“இல்லக்கா. சர்வதேச மரைன் புகைப்பட போட்டியோட கடைசி நாள் நெருக்கமாக வருது. நான் எடுத்த போட்டோஸ் எல்லாம் பிரின்ட் செய்து அதுக்கு தகுந்த கேப்ஷன் எல்லாம் எழுதி அனுப்பணும். ஒருத்தர் மூணு போட்டோஸ் மட்டுமே அனுப்பலாம். சோ என்னோட பெஸ்ட் செலெக்ட் செய்யணும்” என்று சாக்கு போக்கு சொன்னாள்.
“தாத்தா நீங்க போயிட்டு வாங்க. நானும் ஆதியும் புகைப்பட போட்டிக்கு போட்டோஸ் அனுப்ப ரெடி செய்கிறோம். அப்புறம் அங்கே யார்கிட்டேயும் இங்க நடந்ததை சொல்ல வேண்டாம்” என்று தாத்தாவிடம் தேன்மொழி கூறினாள்.
தாத்தா பாரீஸ் சென்று விட ஆதியும் அவளும் போட்டோஸ் அனைத்தையும் ஒன்று திரட்டினர்.
ஆதியிடம் ஆக்டபஸ் பற்றி கூறியவள் தற்செயலாக கேமராவை ஸ்க்ரோல் செய்ய நைலான் கயிறு பிணைத்திருந்த ஆக்டபஸ், அதில் அது துடித்துக் கொண்டிருந்தது அனைத்தும் பதிவாகி இருந்தது.
அப்படங்களைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த தேன்மொழி கேமரா ஆனில் இருந்திருந்ததை அப்போது தான் உணர்ந்த்தாள்.
“ஆதி இங்க பாரு” என்று ஆதியிடம் அப்படங்களை காட்டிக் கொண்டே வந்தவள் சட்டென உறைந்தாள்.
உறைந்தவள் தன் கண் முன் தெரிந்த காட்சியில் உருகிக் கரைந்தாள்.
ஆதியும் அதிசயத்தில் விழி விரித்தான்.
“அக்கா என்னக்கா இது” என்று கேமராவில் இருந்த செந்தமிழை சுட்டிக் கட்டியவன் அன்று அவளை மீட்க புறப்பட்ட போது கடலில் தெரிந்த செந்தீப் பிழம்பைப் பற்றிக் கூறினான்.
“அதை பின்தொடர்ந்து வந்ததால தான் நீ இருந்த தீவை நாங்க கண்டுபிடிச்சோம்” என்று அவன் கூறவும் தேன்மொழி உடைந்தாள்.