அறிந்து கொண்டாள்.
பாறைகளில் இருந்து அவள் இறங்கி வருவதற்குள் அவளை நோக்கி ஆதி ஓடோடி வந்தான்.
“அக்கா” என்று அவளை இறுகத் தழுவிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதவனை சமாதானம் செய்யாமல் அவளும் அவனை அணைத்துக் கொண்டு விசும்பினாள்.
“அதிக நேரம் இல்லை. இரவு ஆகும் முன் திரும்பி விட வேண்டும். வானிலை எந்நேரமும் மாறலாம்” என்று மீட்புக் குழுவினர் கூறவும் அனைவருக்கும் நன்றி கூறியவள் தன்னுடைய டைவ் சூட், கேமரா அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஆதியோடு புறப்பட்டாள்.
“என்னக்கா கடலையே திரும்பி திரும்பிப் பார்த்துட்டு வருகிறாய்” ஆதி கேட்கவும் அப்போது அவனிடம் அவள் எதுவும் கூறவில்லை.
சூரியன் மெல்ல மெல்ல கடலின் மடியில் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தான்.
ஹெலிகாப்டர் மேலே எழும்பி அல்டாப்ரா நோக்கி பயணிக்க கடலையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களில் தென்பட்டான் செந்தமிழ்.
ஹெலிகாப்டர் வேகம் பிடிக்க சிறு புள்ளியாய் தென்பட்டவனை பார்த்துக் கொண்டே சென்றாள் தேன்மொழி.
அவள் ஹெலிகாப்டரில் சென்று விட்டதை அறியாத செந்தமிழ் அக்கரையை வந்தடைந்தான்.
அவளை காணமால் சற்று நேரம் கரையிலே இங்கும் அங்கும் நடைபயின்றான்.
முன்தினம் இருவரும் படுத்திருந்த பாறை மீது ஏறி அங்கே படுத்துக் கொண்டான் செந்தமிழ்.
இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்தவன் அதிகாலையில் மீண்டும் கடலுக்குள் சென்று விட்டிருந்தான்.
சரியாக நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் தேன்மொழி மீட்கப் பட்டிருந்தாள்.
அப்படி ஒரு உணர்ச்சிப் பெருக்கில் அவள் தாத்தாவை முன்பின் பார்த்ததே இல்லை.
உடனேயே மாஹே செல்ல வேண்டும் என்று தாத்தா உத்தரவிட தேன்மொழி மனமே இல்லாமல் மாஹே சென்றாள்.
அல்டாப்ராவில் முதலுதவியாக மருத்துவ பரிசோதனை செய்த போதிலும் தேன்மொழி ஆதி இருவரையும் மாஹேவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்தார் தாத்தா.
நடந்த நிகழ்வுகளால் உடலில் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் மனதவளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் சிறிது காலம் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள்.
“டாக்டர் சொல்லாம போயிருந்தாலும் நான் உங்களை கடலுக்குள் அனுப்புவதாக இல்லை”