உணர்வுகள் பரிபூரணமாக விழித்துக் கொண்டிருந்தனவே.
“செந்தமிழ்” என்று உரத்தக் குரலில் கூவினாள்.
அவள் குரல் கேட்டு தாத்தாவும் ஆதியும் திரும்பிப் பார்ப்பதற்குள் கடலில் குதித்து விட்டிருந்தாள் தேன்மொழி.
“பாப்பா, அக்கா” என தாத்தா ஆதி இருவரின் குரல்கள் ஒரு சேர ஒலிக்க அந்தக் கடலில் சில நொடிகள் நிசப்தம் நிலவியது.
கண் பார்வை தொடும் தூரம் வரை தேன்மொழியைக் காணாமல் தாத்தா ஆதி இருவரும் தவித்துப் போனார்கள்.
அவள் டைவிங் சூட் அணிந்திருந்தால் கவலை கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது அவள் எங்கே என்று எப்படி கண்டுபிடிப்பது.
“தாத்தா, அக்கா சூட் இல்லாமலும் கடலுக்குள் மூழ்கி நீந்தக் கற்றவள். பயப்படாதீங்க. ஏதேனும் ஆமையைப் பார்த்து செந்தமிழ்ன்னு நினைத்து தேடிப் போயிருப்பாள். வந்து விடுவாள்” ஆதி தாத்தாவிற்கு நம்பிக்கை அளித்த போதும் உள்ளுக்குள் நடுக்கமே கொண்டான்.
சில நிமிடங்களே தான் என்றாலும் இருவரையும் உச்சகட்ட தவிப்பில் நிறுத்தி வைத்திருந்த தேன்மொழி சூரிய ஒளியைத் தோற்கடிக்கும் பிரகாசத்துடன் கடல் தேவதையென மிதந்து வந்ததைக் கண்ட தாத்தா ஆதி இருவரும் மிகுந்த நிம்மதி அடைந்தனர்.
அவள் அருகில் வரவே தான் இருவரும் அவள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டு வந்ததைக் கவனித்தனர்.
தேன்மொழியின் செந்தமிழ் அவளை தனது முதுகில் தாங்கியபடி கடல்புறாவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அன்றிலிருந்து அவள் குரல் கேட்ட போதெல்லாம் எங்கிருந்தாலும் அவளைத் தேடி ஓடி வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டான் செந்தமிழ்.
பிரபல பத்திரிக்கையாளர் கெவினுக்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“செந்தமிழ் சேவ் தி ஸீ ப்ராஜக்ட்” பற்றிக் கூறினாள்.
“என்னுடைய பரிசுத்தொகை மட்டுமில்லாமல் என்னோட புகைப்படங்கள், விடியோக்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மொத்தமும் இந்த ப்ராஜக்ட்க்கு பயன்படுத்தப்படும்” என்றவள் தனது ப்ராஜக்ட் பற்றி கூறினாள்.
உலகெங்கும் வருடத்திற்கு எட்டு மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. அவை நேரடியாகவும், நதிகள், மழை நீர் போன்றவற்றாலும் அடித்து வரப்பட்டு கடலில் கலக்கின்றன.