முகம் வாடினாள்.
“சரி சரி பத்திரமா போகணும். அந்த டைவர்ஸ் சொல்லிக் கொடுத்த பாதுகாப்பு முறைகளை எல்லாம் ஒழுங்கா கடைபிடிக்கணும்” என்று தாத்தா அனுமதி வழங்கினார்.
முன்னதாக தனக்கு ஜிபிஎஸ் டிரேக்கர் வாட்ச் போன்ற கருவியை தருவித்துக் கொடுக்குமாறு தேன்மொழி இளங்கோவிடம் கேட்டிருந்தாள்.
அக்கருவி சில ஆயிரம் டாலர்கள் விலை இருந்த போதும் தேன்மொழி கேட்டு அதை அவள் தமையன் வாங்கிக் கொடுக்காமல் போவதா.
அந்த கருவியை தனது மணிக்கட்டில் அணிந்து கொண்டவள் ஆதிக்கும் தாத்தாவுக்கும் அதற்கான அக்சஸ் கொடுத்திருந்தாள்.
“நான் எங்கே இருக்கிறேன்னு நீங்க ட்ரேக் செய்யலாம்” தானாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தேன்மொழி மேற்கொள்ள தாத்தாவிற்கு மேலும் மறுக்க முடியவில்லை.
அது மட்டுமில்லாமல் அந்த ஆக்டபஸ் அவரையும் உலுக்கி விட்டிருந்தது. அதைக் காப்பாற்றிய பேத்தியை எண்ணி பெருமை கொண்டார்.
சர்வதேச புகைப்பட போட்டிக்கு தனது புகைப்படங்களை அனுப்பிய கையோடு கடல்புறாவில் கடலுக்குள் பறந்தனர் ஆதியும் தேன்மொழியும்.
“அக்கா அவ்வளவு தூரம் நாம கடலுக்குள் போய் திரும்பி வர முடியாது. சொன்னா கேளு. செந்தமிழ் இத்தனை நாளா உன்னை நியாபகம் வைத்து உனக்காக காத்துக் கொண்டு எல்லாம் இருக்க மாட்டான்” ஆமை என்று சொன்னால் தேன்மொழி அடித்தே விடுவாள் என்று ஆதி உணர்ந்திருந்தான்.
“எவ்வளவு தூரம் முடியுமோ போவோம் ஆதி” தேன்மொழி கூறவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் கடல் பயணத்தைத் தொடர்ந்தனர்.
என்றும் இல்லாத அதிசயமாக தேன்மொழி கடலுக்குள் செல்லாமல் படகிலேயே அமர்ந்திருந்தாள்.
சூரியன் மறையும் வேளை மீண்டும் தங்கள் ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
அடுத்தடுத்த நாட்களிலும் இதே தொடர்ந்து கொண்டிருந்தது.
தேன்மொழி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டாள். எந்நேரமும் சதா யோசனையாகவே இருந்தாள். அவளிடம் இருந்த உற்சாகம், கலகலப்பு முற்றிலும் தொலைந்து போனது
“இன்னிக்கு என்ன படம் எடுத்தாய் பாப்பா” தாத்தா கேட்க தேன்மொழி ஒன்றும் எடுக்கவில்லை என்று கூறி அவளது அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.
அவளுக்கு செந்தமிழை ஒரே ஒரு முறை கண்டு விட வேண்டும் என்று தவிப்பாய் இருந்தது.