தொடர்கதை - காணாய் கண்ணே - 33 - தேவி
இளவரசன் ப்ரித்விராஜ் ராணியிடம் தைரியமாகக் கூறிவிட்டாலும் உள்ளுக்குள் பயமே. இது சற்றுக் கடினமான காரியமே. சிறிது பிசகினாலும் ராணியின் நிலை கவலை அளிக்க வல்லது. ஆனால் கிரண்தேவியின் கூர்மையான அறிவின் மீது வைத்த நம்பிக்கையே அவனை இப்படி யோசிக்க வைத்தது.
கிரண் தேவியும், இளவரசரும் அன்றைய மீதிப் பொழுதை அந்த சந்தைக்கு அருகில் உள்ள சத்திரத்தில் கழித்தனர். அது பெரும்பாலும் வணிகர்கள் வந்து தங்கும் சத்திரம். கொள்ளையர்கள் தாக்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு பலமாக இருக்கும்.
ப்ரித்விராஜ்ஜும் அந்த வணிகரின் மெய்க்காப்பாளன் போல் அவர் தங்கி இருந்த அறைக்கு வெளியில் காவல் இருந்தான். ராணியோ பணிப்பெண்கள் தங்கி இருந்த அறையில் தங்கிக் கொண்டாள்.
விடியலுக்குச் சற்று முன்பாக ராணியை யாரோ அசைத்து எழுப்பவே, சட்டென்று கண் விழித்தாள். எதிரே ஒரு பெண் இருந்தாள். யார் என்ற கேட்க வர, அவள் கைவிரலை வாய் மேல் வைத்து மறுப்பாகத் தலை அசைக்கவும், என்ன என்று கண்ணால் கேட்டாள் ராணி.
தன் பின்னோடு வருமாறு சைகை காட்டவே, யார் இவள் என்று எண்ணியபடி அவளைத் தொடர முற்பட்டாள் ராணி. அந்தப் பெண்ணைத் தொடர்ந்தாலும், தன் இடையில் உள்ள குறுவாளை தடவிப் பார்த்ததோடு , எதற்கும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.
இவர்கள் இருவரும் வெளியில் வரவும், அங்கே ப்ரித்வியும், ராம்சந்த் இருவரும் நின்று இருந்தனர்.
இளவரசர் அருகில் வந்த ராணி,
“இளவரசே ..?” என்றுக் கேள்வியாக நிறுத்தினாள்.
“தேவி, அக்பர் ஆம்பர் கோட்டையில் தங்கி இருப்பதாகச் செய்தி வந்து இருக்கிறது. “
“சரி இளவரசே. தங்கள் திட்டம் என்ன?”
“இதோ இவர்கள் ராம் சந்திற்கு உறவினர். இவர்களை ராணா மகாராஜ் , ஆம்பர் முதல்வரை உளவு பார்க்க கட்டளையிட்டுள்ளார். தற்போது நமக்கு அக்பர் படை பற்றிய விவரங்களோடு, அவரின் எண்ணப் போக்கும் அறிய வேண்டும் என்பதால், தாங்கள் ஆம்பர் கோட்டையிலேயே அவர் பரிவாரங்களோடு சேர்ந்து விடுவது நல்லது”
“புரிகிறது இளவரசே. ஆனால் இத்தனை அதிகாலையில் அங்கே நான் யாரைச் சந்திக்க இயலும்”
‘அதைப் பற்றி ராம்சிங் உறவினர் நமக்கு கூறுவார்” என்று விட்டு அருகில் இருந்த அந்தப் பெண்ணின் முகம் பார்த்தான் இளவரசன்.