அந்தப் பெண்ணோ ராணி கிரண் தேவியை நிமிர்ந்து பார்த்து,
“இளவரசி, என் பெயர் காமினி. மகாராஜ் உத்தரவுப் படி ஆம்பர் அரண்மனையில் கருணா என்ற பெயரில் வேலை செய்து வருகிறேன். ராணா பிரபுவிற்கு வேண்டியத் தகவல்களை அவர் மூலமாகக் கொடுத்து வருகிறேன்.” என்று ராம்சந்த்தைக் கைக் காட்டினாள்.
“நல்லது காமினி. இனி நானும் ஆம்பர் கோட்டைக்குச் செல்ல வேண்டும். அதற்கு வழி என்ன?”
“இளவரசி, இன்னும் சில மணி நேரங்களில் பகலில் வேலை செய்யும் பணியாளர்கள் அரண்மனைக்குச் செல்வார்கள். நாமும் அவர்களோடு சேர்ந்து கொண்டால் அரண்மனை வேலைக்ககுச் சேர்ந்து விடலாம்.”
அவள் கூறியதைக் கேட்ட இளவரசி, ப்ரித்விராஜ் புறம் திரும்பி,
“இளவரசே, நான் அங்கே சென்ற பிறகு, தங்களுக்குத் தகவல்கள் எவ்வாறு கொடுப்பது?” என்றுக் கேட்டாள்.
“இன்றைய நாள் முடியும் முன்னே, நானும் அங்கே வேலையில் அமர்ந்து விடுவேன் தேவி. அதனால் கவலை வேண்டாம்” என்ற ப்ரித்விராஜ்,
“இளவரசி , நேரிடையாக நீங்கள் பாதிப்படையாத வரை சற்றுப் பொறுமையைக் கடைபிடியுங்கள். நம் முக்கிய நோக்கம் அக்பரை தனி மனிதராக வீழ்த்துவது அல்ல. அவரைப் போருக்கு அழைக்கும் வழி என்ன என்று அறிந்து கொள்வதே” என்று சற்றுக் கவலையோடு கூறினான்.
“புரிந்து கொண்டேன் இளவரசே. “
“அதே சமயம் தங்களுக்கு அவரால் நேரிடையாக ஆபத்து வருமாயின், அதைத் தடுக்க தங்களுக்குப் பூரண உரிமை உண்டு. முடிந்த வரை நானோ, ராம்சந்தோ தங்கள் சமீபமாக ஏதோ ஒரு இடத்தில் இருப்போம். அதனால் கவலை வேண்டாம்”
“எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இளவரசே. நம் திட்டம் முற்றிலும் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கை முழுதுமாக இருக்கிறது”
“நல்லது தேவி. காமினி தாங்களும் முடிந்த வரை ராணியின் சமீபத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்”
“உத்தரவு இளவரசே”
“இனிக் கிளம்பலாம் தேவி” என்றுக் கூறவும், ராணி அப்படியே புறப்பட, காமினி தடுத்தாள்.
“இளவரசி, இப்படியே புறப்படுவது சாத்தியமல்ல. ஆம்பர் கோட்டையின் தலைவர் நம்