நுழைந்த போது, ஏசிக் காற்று அவளுக்கு ஜில்லென்ற உணர்வை கொடுக்க, அந்த அறையில் வீசிய நறுமணம் கொஞ்சம் அவளை சமன்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அறையில் கார்த்திக் இல்லாததே அவளது படபடப்பு குறைய காரணமானது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் போய் தயக்கத்தோடு அமர்ந்தவள், "கார்த்திக் மாமா எங்க போயிருப்பாங்க.. இந்த பர்ஸ்ட் நைட்ல்லாம் வேண்டாம்னு எங்கேயாச்சும் வெளிய போயிட்டாங்களா?" என்று திரும்ப விபரீதமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள்.
அவள் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் கார்த்திக் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வர, அவளுக்கு திரும்ப படப்படப்பு கூடி, கட்டிலிலிருந்து எழுந்து நிற்க,
"எதுக்கு இப்போ எழுந்து நிக்கற.. பரவாயில்லை உட்காரு.." என்று அவனே கைப்பிடித்து அவளை அமர வைத்தான். அவன் தொட்டதும் சிலிர்ப்பை உணர்ந்தாள்.
"இந்தாங்க பால்.. நாம ரெண்டுப்பேரும் பாதி பாதி குடிக்கணுமாம்.." என்று சொல்லி அவள் பால் சொம்பை அவனிடம் கொடுக்க,
"ம்ம் வேற என்னல்லாம் சொன்னாங்க.. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொல்லலையா?" என்று கேட்டான்.
"ம்ம் அம்மா சொன்னாங்க.. பாட்டி தான் இந்த காலத்தில் போய் காலில் விழ சொல்லிக்கிட்டு, அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.." என்று அவள் பதில் கூற,
"ம்ம் பாட்டி பாட்டி தான்.. அப்புறம் வேற என்ன சொல்லி அனுப்பினாங்க பாட்டி.." என்று அவன் கேட்கவும்,
"வேற ஒன்னும் சொல்லலையே.." என்று அவள் அப்பாவியாக கூற, அவளை பார்த்து புன்னகைத்தவன், அவள் கையில் இருந்த பாலை வாங்கி கொஞ்சம் பருகிவிட்டு, மீதியை அவள் கையில் கொடுத்தான்.
அதை அவள் குடித்து முடித்ததும், "உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கணும்னா கேளு.." என்று அவன் கேட்க,
"நீங்க என்னை பிடிச்சு தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்களான்னு தான் கேட்கணும்.." என்று மனதில் நினைத்தவள்,
"அப்படியெல்லாம் ஒன்னும் கேக்கறதுக்கில்ல.." என்று கூறினாள்.
"சரி அப்போ தூங்கு.. எனக்கு ஆஃபிஸ் ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு வரேன்.." என்று சொல்லிவிட்டு, அந்த அறைக்குள்ளேயே இருந்த அவனது அலுவலக அறையான அந்த சிறிய அறைக்குள் அவன் சென்றுவிட, அவள் என்ன மாதிரியாக உணர்ந்தாள் என்று தெரியவில்லை.