தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 18 - மது
வானம் இன்னும் இருள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்க தாரகைகள் உல்லாசமாய் மின்னிக் கொண்டிருந்தன.
வளர்பிறை நிலவோ நான் உலகின் மறுபுறம் உலா செல்லப் போகிறேன் என்று விடை பெற வானம் நிலவை கோபித்துக் கொண்டது.
“அதெப்படி நீ செல்ல முடியும். பகலவன் திருப்பள்ளி எழுச்சி பாடி விட்டுப் போ” என்று அதிகாரம் செய்ய நிலவோ அதை சட்டை செய்வதாய் இல்லை.
“அது தான் இந்த அலைகள் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கின்றனவே. அவைகள் பாடட்டும் சுப்ரபாதம்” என்று கூறி மறைய இவை அனைத்தையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“அலைகளே நீங்கள் சூரியனுக்கு சுப்ரபாதம் பாடுகிறீர்களோ இல்லையோ, என் செந்தமிழுக்கு நான் பாடப்போகிறேன்” என்று சொல்லிக் கொண்டவள் இனிய குரலெடுத்து பாடலானாள்.
அன்றிலிருந்து டாகுமன்ட்ரி படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பை ஆரம்பிக்க இருந்தனர்.
முன்தினமே கெவின் என்ற கவினோடு குழுவினர் அனைவரும் மாஹே வந்தடைந்தனர்.
சில்வர் லைனிங் ரிசார்ட்டிலேயே அனைவரும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்கள் மாஹே படகுத்துறையில் இருந்தே ஒரு பெரிய படகை படப்பிடிக்கு என்று வாடகைக்கு எடுத்திருந்தனர்.
இரண்டு கேமராமேன், நிகழ்ச்சித் தொகுப்பாளர், இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் உதவிக்கு என இருவர் என்று ஏழு பேர் கொண்ட குழுவை தேன்மொழி அன்போடு வரவேற்றாள்.
அதில் மரைன் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் திறன் பெற்ற கேமராமேனை தேன்மொழி ஏற்கனவே அறிந்திருந்தாள்.
“எங்களிடம் ஏழு நாட்கள் தான் இருக்கிறன்றன. அதற்குள் ஷூட் முழுவதையும் செய்து விட வேண்டும். வானிலையும் அடுத்த ஏழு நாட்களுக்கு சீராக இருக்கும் என்றும் அறிந்து கொண்டே வந்தோம்” இயக்குனர் கூறினார்.
“வானிலையை யாராலும் கணித்து விட முடியாது. இருப்பினும் சீராக இருக்கும் என்றே நம்புவோம்” என்று பதில் கூறிய தேன்மொழி ஆதியை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து மெல்ல புன்னகை செய்தாள்.
திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் தானே செந்தமிழுக்கும் அவளுக்கும் ஆத்ம பந்தம் ஏற்பட்டது.
“பகலில் ஷூட் செய்து விடுவோம். மாலை உங்களது விடியோக்கள் போட்டோக்கள் கொண்டு