கொண்டு வந்து விடலாம்” என்று நினைத்துக் கொண்டாள்.
இயக்குனர் அவளுக்கு ரஷ் போட்டுக் காண்பிக்க அதைப் பார்த்து முழுத் திருப்தி கொண்டாள் தேன்மொழி.
“ரொம்ப அழகா வந்திருக்கு. சிறப்பாக எடிட் செய்திருக்கீங்க. பொருத்தமான இசை கூடவே நேர்த்தியான தொகுப்பு. கட்டாயம் பெரிய அளவில் ரீச் கிடைக்கும்” தேன்மொழி சொல்லிக் கொண்டிருந்த போது கெவின் வந்து சேர்ந்தான்.
ரஷ் பார்த்து கெவினும் தனது பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டான்.
ஆதியின் பாட்டி நலமோடு இருக்கிறார் என்ற செய்தியும், டாக்குமன்ட்ரி நன்றாக வந்திருக்கும் மகிழ்ச்சியும் தேன்மொழியின் மனதை நிறைத்தது.
“செந்தமிழ், நாளைக்கு உன்னை கண்டிப்பா பார்க்க வந்திடுவேன். காலையிலே வந்திடுவேன். உன்கிட்ட நிறைய சொல்லணும்” மனதிலே கூறிக்கொண்டவள் படகில் அனைவரையும் கூட்டிக் கொண்டு கடலுக்குள் சென்றாள்.
தனது அன்னையும் வானதியும் டிசைன் செய்த மிக அழகிய வெண்ணிற ஆடையை அணிந்திருந்தாள்.
“இது என்ன மண்ணில் ஓர் நிலவு” என்று அவளைக் கண்ட வான்நிலவு குழப்பம் கொண்டு மேகத்தில் சென்று ஒளிந்து கொள்ளும் முன்னே கேமரா மேன் வான் நிலவை தனது லென்சில் சிறை செய்தார்.
கடைசி வீடியோவும் முடிந்து விட டின்னர் ஆரம்பம் ஆனது.
அனைவரும் அந்த அமைதியான சூழலை ரசித்துக் கொண்டிருந்தனர்.
“செந்தமிழ், சேவ் தி ஸீ அமைப்பு பற்றி எல்லாம் சொன்னீர்கள். செந்தமிழ் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்” அனைவரும் அவளிடம் கேட்டனர்.
“செந்தமிழ் தமிழ்ப் பெயர், ஆண்களுக்கு சூட்டுவார்கள் என்று கெவின் கூறினார்” என்று கேமராமேன் கூற தேன்மொழி கவினை முறைத்த போதும் செந்தமிழ் என்று கூறியதுமே . தேன்மொழியின் முகத்தில் ஒரு தனி பிராகாசம் வந்ததை அனைவருமே கவனித்தனர்.
“நான் இன்று உயிரோடு இருக்கக் காரணம் செந்தமிழ். அவன் என் உற்றத் தோழன். சிறந்த துணைவன். இந்த அமைப்பின் ஆணி வேர் அவன் தான்” என்று தேன்மொழி விகசித்த வதனத்தோடு கூறி, கூடவே அதற்கு மேல் செந்தமிழைப் பற்றி வேறு எதுவும் கேட்க வேண்டாம் என்று சற்றுக் கடுமையாக கூறிவிட்டிருந்தாள்.
எனவே மேற்கொண்டு ஏதும் தூண்டித் துருவிக் கேட்கவில்லை என்ற போதிலும் செந்தமிழ் தேன்மொழியின் பாய் பிரண்ட் என்றே அக்குழுவினர் நினைத்துக் கொண்டனர்.