மேற்கத்திய சம்பிரதாயப் படி வெற்றியைக் கொண்டாட ஷாம்பெயின் பாட்டிலை நுரைக்க விட தேன்மொழி மெல்ல அங்கிருந்து அகன்று படகின் முகப்பிற்கு வந்து சேர்ந்தாள்.
நேரமாகி விட்டதால் கரைக்குத் திரும்பி விடலாம் என்று படகு ஓட்டுனரிடம் கூறியவள் எதிர்புறமாக கடலைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டு நிலவில் ஒளிரும் கடலை ஆழ ரசித்தாள்.
“செந்தமிழ் ஐ மிஸ் யூ சோ மச்” சற்றே உரக்க கூறிவிட்டிருந்தாள்.
கூடவே “இவள் செந்தமிழ் தேன்மொழியாள்” என மெல்லியக் குரலில் மனதிற்குள் முணுமுணுத்தாள்.
படகு கரையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.
தேன்மொழி அந்த ரம்மியமான ஏகாந்த சூழலை கண் மூடி ரசித்திருந்தாள்.
“ஹே அது என்ன. கடலில் நெருப்பு பற்றிக் கொண்டதா” உரத்தக் குரல் கேட்க தேன்மொழி திடுக்கிட்டாள்.
“அது மிதந்து கொண்டு நம் படகை நோக்கி வருகிறதே. நெருப்பு மீன் இருக்கா என்ன. நம்ம படத்திற்கு போனஸ். பிஸ்டலையும் வலையையும் எடுத்துட்டு வாங்க” மற்றோர் குரல் கேட்க தேன்மொழி மேலும் அதிர்ந்தாள்.
அவர்களின் படகை நோக்கி வருவது செந்தமிழ் என்று அவள் மட்டும் தானே அறிவாள்.
இன்னும் கொஞ்சம் நெருங்கி விட்டான் எனில் அவனை இவர்கள் அனைவரும் பார்த்து விடுவார்களே.
அவன் ஓர் அதிசய கடல் உயிர் என்று இவர்கள் அறிந்து கொண்டால் அப்புறம் செந்தமிழ் மீது மயக்க குண்டை செலுத்தி வலை வீசிப் பிடித்து கண்ணாடி தொட்டியில் அடைத்து காட்சிப் பொருளாக்கி வேடிக்கை காண்பார்களே.
“எப்படியாவது செந்தமிழை இவர்களிடம் இருந்து காப்பாற்றி விட வேண்டுமே” என்று அவள் வெகு நேரம் எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கவில்லை.
மேல் தளத்தில் பிஸ்டலை கையில் வைத்து குண்டுகளை லோட் செய்வதைக் கண்டவள் சட்டென கடலில் தாவி குதித்து விட்டிருந்தாள்.
சரியாக அதே நேரம் நெருப்பு போல கடலில் தெரிந்ததை நோக்கி படக்குழுவினர் சுட்டு விட செந்தமிழை நீருக்குள் அழுத்திய வண்ணம் அணைத்துக் கொண்டவளின் தேகத்தை காற்றில் சீறிக் கொண்டு வந்த குண்டு துளைத்து விட்டிருந்தது.
நடந்ததை உணர அனைவருக்கும் சில நொடிகள் பிடித்தன.