பிடிக்கலன்னா, அவன் நான் சொன்னதுக்காக சம்மதிக்கணும்னு அவசியம் இல்ல.. வேண்டாம்னு பிடிவாதமா சொல்லியிருப்பான்.. அந்த அளவுக்கு அவனுக்கு முடிவெடுக்கும் உரிமையை கொடுத்து தான் வளர்த்திருக்கேன்..
அப்படி அவனுக்குமே இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கும்போது, நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க.. எங்க எல்லோருக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதம்னு முடிவானதும், உங்கக்கிட்ட என்னோட பையன் பேசினான்.. ஆனா அப்போ நீங்களும் உங்க பிள்ளைங்களும் பிஸியா இருக்கோம், அதனால நீங்களே முடிவெடுத்துக்கோங்கன்னு சொன்னீங்களா இல்லையா? அதுக்குப்பிறகு தான் நாங்க கல்யாண தேதியை முடிவு செய்தோம்..
சரி எல்லாம் முடிவு செய்துட்டு உங்களுக்கு தெரிவிச்ச பிறகு, உண்மையிலேயே உங்க பேரன் மேல அக்கறை இருந்திருந்தா, கார்த்திக்கிற்கு போன் பண்ணி இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதமான்னு விசாரிச்சிருக்கணும்.. அந்த அக்கறையெல்லாம் உங்களுக்கு எங்க?" என்று குறிஞ்சியம்மாள் கோபமாக கேட்க,
"என்ன கடைசியில் என்னோட பேரன் மேல எனக்கு அக்கறையில்லைங்கிற மாதிரி பேசறீங்களா?" என்று அவரும் கோபப்படுவது போல் பேசினார்.
பிரச்சனை பெரிதாகுமோ என்பது போல் நித்யா பயந்து, "பாட்டி.." என்று கூப்பிட்டப்படி அவர் அருகில் வந்தவள்,
"காஃபி எடுத்துக்கோங்க் பாட்டி.." என்று கொடுத்தாள்.
"நீங்களும் எடுத்துக்கோங்க தாத்தா.." என்று அந்த பெரியவரிடம் காபியை நீட்ட, அவளை முறைத்தப்படியே அதை எடுத்துக் குடித்தார்.
நித்யாவின் முகத்தை பார்த்தே அவள் இவர்கள் பேசியதை கேட்டுவிட்டதை குறிஞ்சியம்மாள் புரிந்துக் கொண்டவர், "இங்கப்பாருங்க.. கல்யாணம் நடக்கறதுக்கு முன்ன வரை நாம என்ன கருத்து வேணும்னாலும் சொல்லலாம், ஆனா கல்யாணம் நல்லப்படியா நடந்து முடிஞ்சப்பிறகு, எந்த குறையும் சொல்றதில் எந்த பிரயோஜனமுமில்லை,
நித்யா படிக்கலன்னாலும் நல்லப் பொண்ணு.. கார்த்திக் புத்திசாலி பையன், நித்யாவை அவன் புரிஞ்சு நடந்துப்பான்.. நித்யாவும் அவனுக்கு ஏத்தது போல நடந்துப்பா.. ஒரு தாத்தாவா பேரனை மனசார வாழ்த்திட்டு போங்க.. தேவையில்லாததெல்லாம் பேசாதீங்க.." என்று குறிஞ்சியம்மாள் தீர்மானமாக கூறவும், கார்த்திக்கின் தாத்தா ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்.
அவர் சென்றதும், "பாட்டி.." என்று நித்யா ஏதோ சொல்ல வர,