தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 03 - சித்ரா. வெ
மேலே தனதறைக்கு சென்ற மகள் சிறிது நேரத்தில் கீழிறங்கி வரவும், "கொஞ்ச நேரம் கார்த்திக் கூட இருக்கறது தானே நித்தி.. நானே காலை டிஃபன் வேலையை பார்த்துக்கிறதா தானே சொன்னேன்.." என்று வஞ்சி சொல்ல,
"இருக்கட்டும் ம்மா.. மாமா குளிக்கப் போயிருக்காங்க.. அவங்க ரெடியானதும் வெளிய போலாம்னு சொல்லியிருக்காங்க.. நான் தலை மட்டும் தான் பின்னனும்.. அதனால் கொஞ்ச நேரம் உங்களுக்கு உதவியா ஏதாச்சும் செய்றேன்.. இத்தனை பேருக்கு டிஃபன் செய்யணுமே.." என்று நித்யா கூறினாள்.
"ஆமாம் கார்த்திக்கிற்கு காஃபி கொண்டு போய் கொடுக்கலையா? குளிக்க போயிட்டான்னு சொல்ற?" என்று வஞ்சி கேட்கவும்,
அவளை முத்தமிட்டவன் இனிப்பு சாப்பிட்டதாக சொல்லியது அவள் ஞாபகத்திற்கு வரவும், அவள் முகம் வெட்க சாயத்தை பூசிக் கொள்ள, "இல்லம்மா மாமா காஃபி வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. நேரா வந்து டிஃபனே சாப்பிட்டுப்பாங்க.." என்று பதில் கூறினாள்.
மகள் வெட்கப்படுவதிலேயே ஏதோ அவர்களுக்குள்ளான அந்தரங்க விஷயம் என்பதை உணர்ந்த வஞ்சி மகிழ்ச்சியில் சரி என்று தலையாட்டிக் கொண்டார்.
"சரி பாட்டியும் அண்ணியோட அப்பாவும் தோட்டத்தில் பேசிக்கிட்டு இருக்காங்க.. அவங்களுக்கு இந்த காஃபியை கொண்டு போய் கொடுத்துட்டு வா.. வந்து சட்னி மட்டும் அரைச்சு கொடுத்திட்டு நீ போய் கிளம்பு.." என்று அவள் கையில் இரண்டு கோப்பைகள் அடங்கிய தட்டை கொடுத்ததும் அதை எடுத்துக் கொண்டு அவள் தோட்டத்திற்கு செல்ல, அவர்களுக்கு கொஞ்சம் தொலைவில் செல்லும் போதே, கார்த்திக்கின் அன்னை வழி தாத்தா குறிஞ்சியம்மாளிடம் ஏதோ காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுவது நித்யாவிற்கு தெளிவாகவே கேட்டது. அதுவும் அவளைப் பற்றி தான் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
"என்னோட பொண்ணு இறந்துட்டா.. இந்த குடும்பத்துக்கு நாங்க சம்பந்தில்லாத ஆளா ஆயிடுவோமா? கார்த்திக்கிற்கு நான் தாத்தா.. அவனோட நலனில் எங்களுக்கும் அக்கறை இருக்கு.. அவனுக்கு எத்தனை பொண்ணோட ஜாதகம் கொண்டு வந்து காமிச்சோம்.. நல்லா படிச்ச பொண்ணுங்க, நல்ல வசதின்னு எத்தனை காமிச்சோம்.. எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இப்படி ஒரு பொண்ணை கார்த்திக்கிற்கு கல்யாணம் செய்திருக்கீங்க..
அதுவும் எங்களை கலந்துக்காம எல்லாம் பேசி முடிச்சிட்டு கோவிலில் கல்யாணம்னு வெளி ஆளுங்களுக்கு சொல்றது போல சாதாரணமா சொல்றீங்க.. அந்த அளவுக்கு நாங்க ஆகிட்டோமா? எங்க பொண்ணை ஒன்னும் நாங்க சும்மா கட்டிக் கொடுக்கல.. சீர்வரிசை சொத்துன்னு அவளுக்கு எல்லாம் கொடுத்து தான் கட்டிக் கொடுத்தோம்.. மாப்பிள்ளை