தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 01 - சாகம்பரி குமார்
பரபரப்பான நகர சூழலை தவிர்த்து அமைதி குடி கொண்டிருந்த அந்த இடம் மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் இருந்துது. அதன் நுழைவாயில் காட்டுப்பகுதிக்குள் செல்லும் பாதையின் தொடக்கமாக இருந்தது. பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிப்பும் அங்கே இருந்தது.
அது ஒரு ஆராய்ச்சி மையம். வெளியாட்கள் அங்கு வர அனுமதி இல்லை. அரசின் அனுமதி பெற்ற ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இப்போதைக்கு அங்கு நடக்கும் ஆராய்ச்சிகள் மரபணு மாற்றம் தொடர்பானவை என்று மட்டும் தெரிந்து கொள்வோம். விரிவாக பின்னொரு அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.
இப்போது பிரச்சினை அந்த ஆராய்ச்சி தொடர்பானது அல்ல. அந்த ஆராய்ச்சியை செய்பவனை பற்றியது. அவனுக்கு என்ன பிரச்சினை? அடடா… மனம் தெளிவாக இருந்தால்தானே ஆராய்ச்சியில் கருத்தாக இருக்க முடியும்…
இதே கவலைதான் அங்கிருந்த வினய்க்கும் இருந்தது. அவன் அந்த அறிவியல் மையத்தில் இளநிலை விஞ்ஞானியாக இருந்தான். டாக்டர்.அதிரதனிடம் உதவியாளராக இருக்கிறான்.
அவனுடைய கவலை அதிரதன் பற்றியதே. எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார். இத்தனை நாட்கள் சிக்கலில் தடுமாறிக் கொண்டிருந்தவர் இன்றைக்காவது அதற்கு ஒரு முற்று புள்ளி வைத்து விட்டு வந்தால் நல்லது என்று நினைத்தான்.
அதிரதனுக்கு என்னதான் பிரச்சினை…? அவனுக்கு நடந்த திருமணம்தான். அது நடந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. திருமணம் நடந்த மறுநாள் முகம் சோர்ந்து போய் வந்தவன் அதன் பிறகு சரியாகவே இல்லை. ஆராய்ச்சியிலும் கவனம் இல்லை. ஒரே வாரத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்த நிலை வந்து விட்டது.
இன்றுடன் அந்த பிரச்சினை முடிவிற்கு வந்து விடும். அந்த திருமணத்தை முறிந்துக் கொள்ள இருவருமே தயாராக இருந்தபோது இந்த விசயம் எளிதில் முடிந்து விடும் என்றுதான் வினய்க்கு தோன்றியது.
அதரதனின் வரவிற்காக காத்திருந்தான். அமைதியான சில மணி நேரங்கள் கழிந்து பின் அதிரதன் உள்ளே வந்தான்.
“குட் மார்னிங் பாஸ்” என்று எழுந்தவன் அவனுடைய சோர்வான முகம் கண்டு குழம்பினான்.
“பாஸ்… என்ன ஆச்சு? எல்லாம் ஓகேதான?” என்றான்.
“எதுவும் சரியில்லை வினய். ரொம்ப அப்செட் ஆயிட்டேன்”