தனியா வரத் தெரியலன்னா, ஒன்னு என்கிட்ட கொஞ்சம் இருங்கன்னு சொல்லியிருக்கணும், இல்ல கையில் மொபைல் எதுக்கு இருக்கு? கூப்பிட்டு என்னை வரச் சொல்லலாமில்ல, இல்லை நான் போன் செஞ்சாவது எடுக்க, எங்கேயாச்சும் மொபைலை ஆன்ல வச்சிருக்கியா? இதில் ஏதாவது சொல்லிட்டா கோபம் வேற வந்து முகத்தை சுருக்கி வச்சிக்கிறது," என்று எரிந்து விழுந்தவன்,
"ஆமாம் உன்னோட மொபைல் சார்ஜ் போட்டீயா? இல்லையா?" என்று கேட்க,
அவள் தன் கைப்பையை எடுத்து தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதுவோ அணைக்கப்பட்டிருந்தது. அவள் அதை உயிர்ப்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்க, அவனோ அவளது அலைபேசியை பார்த்தப்படி இருந்தான்.
அது ஒரு பேசிக் மாடல் அலைபேசி. இந்த பேசியையா அவள் வைத்திருக்கிறாள்? என்பது போல் அவன் பார்க்க, அலைபேசி அணைக்கப்பட்டிருப்பது தெரிந்து தான் கோபமாக பார்க்கிறானோ என்று நினைத்தவள்,
"நேத்து வீட்ல இருந்து கிளம்பும் போது நல்லா சார்ஜ் போட்டு தான் எடுத்துட்டு வந்தேன் மாமா, எப்போதும் ரெண்டு நாளைக்கு போன்ல சார்ஜ் நிக்கும், இன்னைக்கு சீக்கிரமா தீர்ந்து போச்சு போல," என்று தயங்கி தயங்கி கூறினாள்.
"ஆமாம் ஏன் இந்த மொபைலை வச்சிருக்க? பாட்டி உனக்கு புது மொபைல் வாங்கி கொடுக்கலையா?" என்று அவன் கேட்க,
"புது போன் வேணுமா? மாமாவை வாங்கித் தர சொல்லட்டுமான்னு பாட்டி கேட்டாங்க, நான் தான் இதுவே நல்லா இருக்கு போதும்னு சொல்லிட்டேன்." என்ற அவளது பதிலில் அவன் மீதே அவனுக்கு கோபம் வர,
"சரி சீக்கிரமா சாப்பிடு, கிளம்பலாம்?" என்றான். அவளுக்கும் சாப்பிட்டதே போதுமென்பது போல் இருந்தாலும், உணவை வீணாக்க கூடாது என்பதால், நடுவில் தண்ணீரை குடித்தப்படி வேகமாக அவள் சாப்பிட, மீண்டும் ஏதாவது சொல்வானா? என்று அவனை ஓரக் கண்களால் ஒருமுறை பார்க்க, அவனோ ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான்.
பின் ஒருவழியாக அவள் சாப்பிட்டு முடித்து கைகழுவிக் கொண்டு வரவும், இருவரும் காரில் பயணித்தார்கள். மூனாரின் இயற்கை பிரதேசங்களை சுற்றி பார்த்தாலும், கார்த்திக்கின் மௌனம், அவன் திட்டியது அதுவே நித்யாவை சுற்றி சுற்றி வந்ததால் எதிலும் அவள் மனம் லயிக்கவில்லை.
அருவிகள் கொட்டும் அழகில் அவளது கவலைகளை நியாயமாக தொலைத்திருக்க வேண்டும்,