போலிருந்தது.
வயதில் பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என அத்தனைப் பேரும் பெண்களே.
அங்கே இருந்த அத்தனை முகலாயப் பெண்களும் அவர்களின் பாரம்பரிய உடையான புர்காவை விட்டு விட்டு வந்து இருந்தனர்.
அதனால் அவர்களின் நிறமும், அழகும் எடுப்பாகத் தெரிந்தன. முகங்கள் சற்று வித்தியாசமாக இருந்தாலும், அன்றைய சுதந்திரம் அவர்களின் முகத்திற்குத் தனிக் களையைக் கொடுத்தது.
இதைப் பார்த்த ராஜபுத்திரப் பெண்களும் , தங்களின் பாரம்பரிய உடை அணிந்து , அதே சமயம் முகம் மறைக்கும் துணியை நீக்கி விட்டு இருந்தனர்.
முகலாயப் பெண்கள் இவர்களைப் பார்த்து தங்களுக்குள் பேசுவதும், ராஜபுத்திரப் பெண்கள் அவர்களைப் பார்த்துப் பேசுவதுமாக இருந்தனர்.
தங்களைக் கட்டுபடுத்தும் சக்திகள் இல்லாததால், விருப்பத்திற்கு நடந்துக் கொண்டு இருந்தனர்.
ஒரு பக்கம் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் நடைப் பெற்றுக் கொண்டு இருந்தது.
ஒவ்வொரு இடத்திலும் சற்று நேரம் செலவழித்து விட்டு காமினியும் , கிரண் தேவியும் மற்றவர்களிடமிருந்து தனியே பிரிந்து சென்றனர்.
“காமினி , நாம் எண்ணியது போல் இளவரசரைச் சந்திக்க இது ஏற்ற இடமாகத் தெரியவில்லையே”
“ஆம் தேவி. ஏற்ற காலமும் அல்ல.”
“இப்பொழுது என்ன செய்வது? இந்தச் சித்திரம் எத்தனை விரைவில் ராணா மகாராஜ்சிறகுக் கிடைக்கிறதோ அத்தனை நல்லது.”
“அதற்கு முன் நாம் இளவரசரைச் சந்திக்க வேண்டுமே தேவி”
“அதுதான் சிந்திக்கிறேன் காமினி” என்றாள்.
இருவரும் செய்வது அறியாது நின்று கொண்டு இருக்கும் போது, அவள் அருகில் வந்த ஒரு பெண் , முகலாயர்களின் மொழியில், தன்னோடு வந்த தன் பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லை எனவும், மருத்துவச்சியை அழைத்து வரும் வரை அவளுக்குத் துணை இருக்குமாறும் கேட்டார்.
கிரண் தேவிக்குப் புரியவில்லை எனினும், அதப் பெண்ணின் கவலையான முகம் பரிதாபத்தை ஏற்படுத்த, எங்கே என்று விசாரித்தாள்.