அவர்களின் பாதுகாப்பிற்குச் செல்லுங்கள் “ என்று உத்தரவிட்டாள்.
காவல் தலைவனோ “ராணி, நம் அரண்மனைப் பாதுகாப்பிற்கு என்ன செய்வது ?” என்றுக் கேட்டான்.
“பேரரசரின் வீரர்களைப் பாதுகாப்பில் இருக்கச் சொல். ராணியின் கட்டளை எனத் தெரிவி” என்றாள்.
“உத்தரவு ராணி” என்றபடித் திரும்பிச் சென்றான்.
ஜோதா ராணியின் அரண்மனையில் இருந்து சற்றுத் தொலைவு தள்ளி இருந்தது மீனா பஜார் என்றழைக்கக் கூடிய சந்தை.
இவர்கள் கூட்டமாக செல்ல, அவர்கள் பாதுகாப்புக் கருதி சற்றுத் தூரத்தில் ப்ரித்விராஜ் தலைமையில் சில வீரர்கள் சென்றனர்.
ஜோதா ராணி உத்தரவிட்டது ப்ரித்வியிடமே என்பதால், அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. இல்லையெனில் ஏதேனும் காரணம் சொல்லி, வெளியே வந்திருக்க வேண்டும். தற்போது அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.
கிரண் தேவி சற்று முன்னரே தங்களைக் காவலர்கள் தொடர்வதைக் கண்டுக் கொண்டவள், அதில் இளவரசரும் இருப்பதைக் கண்டு கொண்டாள்.
மீனா பஜார் அருகில் வரவும், மிகப் பெரிய நுழைவாயில் போல் பூந்தோரணம் அமைக்கப் பட்டு இருந்தது. அங்கேயே பெண்களை மட்டுமாய் அனுமதிக்கும் வகையில் இரு காவலர்கள் நின்று இருந்தனர்.
கிரண் தேவி மற்றும் அவளோடு சேர்ந்த அனைவரும் அந்த வாயிலுக்குள் செல்ல, ப்ரித்விராஜ் மற்றும் அவனுடைய காவலர்கள் அங்கேயே தடுக்கப் பட்டனர்.
ப்ரித்விராஜ் காவலனிடம்
“நாங்கள் ஜோதா ராணியின் பாதுகாப்பு வீரர்கள். உள்ளே செல்பவர்கள் எங்கள் அரண்மனையைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பின் தொடர வேண்டும் என்பது எனக்கு இடப்பட்டக் கட்டளை. “ என்றான்.
“இங்கே பேரரசரின் கட்டளைத் தவிர வேறு யார் கட்டளையும் செல்லாது வீரனே” என்றார்கள் காவலாளிகள்.
அவர்கள் இருவர் மட்டுமே. இவர்களோ ஆறு பேருக்குக் குறையாமல் இருந்தனர். இருவரையும் வீழ்த்தி விட்டு உள்ளே செல்லலாமா என்று எண்ணிய இளவரசன், தேவை இல்லாத விஷயங்களில் தலையிட்டுப் பிரச்சினை ஆக்க வேண்டாம் என்று தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டான்.