அவள் சற்றுத் தள்ளி ஒரு சிறு சந்திற்குள் உள்ள வீட்டைக் காட்டவும், சற்று யோசித்தாலும், அவளோடு சென்றாள்.
காமினியைப் பார்த்து
“காமினி, பாவம் இந்தப் பெண். அவள் பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லை போலே. என்னை துணை இருக்கச் சொல்கிறாள். நீ இங்கேயே இரு. நான் சென்று உடனே வந்து விடுகிறேன். “
“ராணி, தாங்கள் இங்கேயே இருங்கள். நான் சென்று வருகிறேன்”
“இல்லை. அந்தப் பெண் என்னிடம் தான் உதவி என்றுக் கேட்டாள். நான் உன்னை அனுப்பினால் அது தட்டிக் கழித்ததாகும். அதனால் நானே சென்று வருகிறேன். நீ இங்கே இந்தக் கலை நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிரு” எனவும், சரி என்றாள் காமினி.
காமினிக்கும் யோசிக்க வேண்டி இருந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று. எனவே கிரண் தேவியை அனுப்பி விட்டாள்.
கிரண் தேவி சென்று வெகு நேரமாகியும் வரவில்லை எனவும், அவள் சென்ற திசையில் சென்றுப் பார்த்தாள் காமினி. அங்கே யாரும் இருந்ததற்கான அடையாளமே இல்லை. காமினிக்குக் கலக்கம் ஏற்பட ஆரம்பித்து இருந்தது.
மேலும் சற்றுத் தூரம் உள்ளே சென்றுத் தேட, அங்கேயும் இல்லை. மீண்டும் வந்து முதலில் இருந்து கடைசி வரைச் சென்றுத் தேடியும் ராணி கிடைக்கவில்லை.
அப்போது மாலை மங்கும் நேரமாகிவிட்டபடியால், பெண்கள் அனைவரும் திரும்ப ஆரம்பித்து இருந்தனர்.
காமினி ராணியை மட்டுமில்லாமல் , ராணியை அழைத்துச் சென்ற பெண்ணையும் தேட, அவளும் கிடைக்கவில்லை.
மூன்றாவது முறையாக வாயில் காவலர்களை விசாரித்தவள், சற்றுத் தூரத்தில் இளவரசன் ப்ரித்விராஜ் வந்துக் கொண்டு இருப்பதைக் கண்டு கொண்டாள்.
“இறைவா. இது என்ன சோதனை? இளவரசரிடம் என்ன பதில் சொல்லப் போகிறேனோ?” என்று பதட்டம் அடைந்தாள்.
அவளின் பதட்டம் உணர்ந்த ப்ரித்விராஜ் என்னவென்றுக் கேட்க, காமினி மடமடவென்று அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
முதலில் அவளின் பதட்டத்தை தடுத்த ப்ரித்விராஜ், அங்கிருந்த காவலர்களை விசாரித்தான்.