முடிந்து விடும். அந்தப் பெண்ணின் உறவுகள் யாரும் பார்க்கவோ, பழகவோ முடியாது” என்றுக் கூறவும் சற்று யோசனையோடு அவர்களிடத்தில் இருந்து தன் கத்தியை விலக்கினான்.
“இந்த முறை தப்பி விட்டாய் காவலனே? இனி ஒருமுறை இவ்வாறுக் கேள்விபட்டேனோ, உன் உயிருக்கு நான் உத்தரவாதம் அல்ல” என்றுக் கூறிவிட்டு ராம்சிங் நோக்கித் திரும்பினான் இளவரசன்.
“ராம்சிங் ராணிக் கிரண் தேவியைத் தற்போது காப்பாற்றும் வழி நம் ஜோதா ராணியிடத்தில் மட்டுமே இருக்கும். தாமதிக்காமல் அங்கே செல்லலாம்” என்று புறப்பட்டான் இளவரசன்.
இவர்களோடு காமினியும் சென்றாள். ஜோதா ராணியின் அரண்மனையில், காமினி ஜோதாவிடம் விவரம் செல்ல, ராணி வேகமாக கோட்டைக் காவலன் நோக்கி வந்தாள்.
“காவலரே , இது என்னக் கொடூரம்? என்னிடம் பணிபுரிபவளை கடத்திச் செல்ல இந்த பதேபூர் ராஜ்யத்தில் யாருக்குத் தைரியம் இருக்கிறது? அவர்களைப் பற்றி விவரம் எதுவும் தெரியுமா?”
அவளின் கோபம் கண்ட இளவரசனுக்குச் சற்றுத் தைரியமாக இருந்தது. இந்தக் கோபத்தின் பயனால் கிரண் தேவியைக் கண்டுப் பிடித்து எப்படியாவது இங்கிருந்து வெளியேற்றி விடலாம் என்று திட்டமிட்டான்.
எனவே “காவலர்கள் கூற்றுப் படிப் பார்த்தால் , கிரண் நம் பேரரசரின் மாளிகையில் இருக்கக்கூடும் என்றுத் தோன்றுகிறது” என்றான்.
அதைக் கேட்டு ஜோதா திடுக்கிட்டு அமர்ந்து விட்டாள்.
“ராணி, தாங்கள் இப்படி அமர்வதற்குக் காரணம் என்ன?”
“காவலரே, பேரரசரின் எந்த முடிவுகளிலும் தலையிடும் உரிமை எனக்குக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அவரின் அந்தப் புற விஷயங்களில் தலையீடோ, குறுக்கீடோ அனுமதிக்க மாட்டார்”
“பவானித் தாயே , இது என்ன சோதனை?” என்றுப் இளவரசன் தன்னை மீறி கூறவும், திடுக்கிட்ட ஜோதா,
“காவலரே, தாங்கள் உதய்பூர் வாசியா?” என்றுக் கேட்டாள். அந்தக் கேள்வியில் தான் தன்னை மறந்ததை உணர்ந்த இளவரசன் , அதை மறைக்காமல் ஒத்துக் கொண்டான்.
“அப்படி என்றால், மகாரானாவிற்காக ஒற்றறியவே இங்கே தங்கி இருக்கிறீர்களா? என்றுக் கேட்கவும் , ஆமோதிப்பாகத் தலையசைத்தான் இளவரசன்.