தொடர்கதை - காரிகை - 01 - அமுதினி
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
தீமிர்ந்த ஞானச் செறுக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அந்த பங்களாவின் முன்பு தன்னுடைய நண்பனின் பைக்கில் இருந்து வேகமாக இறங்கினான் அவன். அவனுடைய தலை எல்லாம் கலைந்திருந்தது. அவனுடைய சட்டை ஆங்காங்கே கிழிந்து இருந்தது. வேகமாக அந்த வீட்டின் கதவருகே வந்தவன் அதை வேகமாக தட்டினான்.
"ஏய் பவித்ரா வெளிய வா... " அவன் குரல் ஓங்கி ஒலித்தது. அந்த சத்தத்தில் கதவை திறந்த செக்யூரிட்டியை பிடித்து தள்ளியவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
அங்கு ஹாலில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து எதையோ எழுதி கொண்டிருந்தாள் பவித்ரா.
நேராக அவளை நோக்கி சென்றவன் அவளின் கழுத்தை பிடித்து சுவரோடு சேர்த்து நிறுத்தினான்.
"நீ என்ன பெரிய இவளா? உலக அழகினு நினைப்பா?" அவன் கண்களில் இருந்த ரௌத்திரம், அவன் கழுத்தில் கோவத்தால் புடைத்து இருந்த நரம்புகள் எதுவும் அவளை பயமுறுத்தவில்லை. அவள் கைகளால் அவனின் பிடியை விலக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.
உள்ளே ஓடிவந்த செக்யூரிட்டி "ஏய்ய் விடுப்பா... யாரு நீ " என அவனின் கைகளை விலக்க முயற்சிக்க, இங்கு ஏற்பட்ட கூச்சலில் மேலிருந்து வந்த சகுந்தலா தேவி யாரோ ஒருவன் பவித்ராவின் கழுத்தை நெறிப்பதை கண்டு ஓடிவந்தார்.
"தம்பி கையை எடு. யாரு நீ விடுப்பா" என அவன் கையை பிடித்து இழுத்தார்.
"இனிமேல் இந்த சத்யாவை நீ உன் லைப்ல மறக்கமுடியாத மாதிரி பண்றேன்டி. உன் வாழ்க்கையை நீ எப்படி சந்தோசமா வாழப்போறேன்னு நானும் பாக்கறேன். என்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்திட்டு நீ நிம்மதியா வாழ்ந்துடுவியா? நான் பட்ட ஒவ்வொரு அடிக்கும் நீ பதில் சொல்லவேண்டி வரும். சொல்ல வைப்பேன்." பழியுணர்வு நிறைந்த குரலில் சொன்னவன் அவளை அப்படியே சுவற்றில் தள்ளிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
அவன் போவதையே பார்த்து கொண்டிருந்த சகுந்தலா தேவி திரும்பி பவித்ராவை பார்த்தார்.அவள் நடந்த எதற்கும் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் நின்றிருந்தாள்.