"யாருமா அது? எதுவும் பிரச்சனையா? எதுவும் போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கணுமா?" சகுந்தலாதேவி கேட்க, வேண்டாம் என தலையசைத்தவள் மீண்டும் அவள் எழுதிக்கொண்டிருந்த இடத்திலே அமர்ந்து எழுத தொடங்கினாள். இனி அவளிடம் கேட்டாலும் ஒரு பதிலும் வராது என தெரியும் அவருக்கு. "கடவுளே இந்த பெண்ணுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது இது போன்ற பிரச்சனைகள் எல்லாம். இவளுக்கு எப்போது தான் நிம்மதி கிடைக்கும்" வருந்த மட்டுமே முடிந்தது அவரால்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு
நேரம் மாலை ஆறை நெருங்கியிருந்தது. எல்லோரும் தங்களுடைய கணிப்பொறியை அணைத்து விட்டு கிளம்ப தயாராயினர். பவித்ரா அவளின் கையில் சில பேப்பர்களை எடுத்து கொண்டு அவளின் அறையை விட்டு வெளியே வந்தவள் அடுத்திருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்தார்.
"மேடம் இந்தாங்க. உங்களுடைய ரிலீவிங் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ப்ரின்டவுட் எடுத்துட்டேன். இதுல எல்லாமே இருக்கு. நீங்க ஒரு முறை செக் பண்ணிருங்க" தன் கையில் இருந்த பேப்பர்களை அவளின் மேலாளரிடம் கொடுத்தாள்.
"தேங்க்ஸ் பவித்ரா. எல்லாம் சரியா தான் இருக்கும். நீ கெளம்பும்மா நான் பார்த்துக்கறேன். உனக்கு லேட்டாயிடும்" அவர் சொல்லவும் சரி மேடம் என்று அவள் அறையை நோக்கி செல்ல திரும்ப, "அப்புறம் பவித்ரா, உன்னுடைய லீவு அப்ரூவ் பண்ணிட்டேன். இந்த போர் மந்த்சா நீ பண்ணுன ஒர்க் பத்தின பீட்பேக் எல்லாம் கம்ப்யூட்டர்ல அப்லோட் பண்ணிட்டேன். நீ உன் எக்சாம்ஸை நல்லா பண்ணு. ஆல் தி பெஸ்ட், டேக் கேர் பவித்ரா" என்றவரிடம் ஒரு நன்றி சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.
ஒரு பெருமூச்சுடன் அவள் கொண்டு வந்த பேப்பர்களை பார்த்தவர் மனதில் நான்கு மாதங்களுக்கு முன் சகுந்தலாதேவியுடன் பேசியது நினைவிற்கு வந்தது.
"மேடம் எங்க கம்பெனில ரெக்கமண்டஷன் எல்லாம் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. " -தயங்கியபடி சொன்னார் சகுந்தலாவிடம்.
"எனக்கு புரியுது மிருணாளினி, பட் நீங்க இந்த ஒரு முறை ட்ரை பண்ண முடியுமா?" சகுந்தலாதேவி பற்றி அவருக்கு நன்கு தெரியும். யாருக்காகவும் இப்படி பரிந்துரைக்க சொன்னதில்லை. இது தான் முதல் முறை. மிருணாளினிக்கு இந்த காலத்து பெண்களுக்கு பொறுப்புணர்வு குறைவு, விளையாட்டு தனம் அதிகம் என்ற எண்ணம் இருந்தது. இவர் வேறு இப்போது தான் பிகாம் முடித்த பெண்ணை வேலைக்கு எடுத்து கொள்ள சொல்கிறார்