தன்னுடைய அறைக்குள் நுழைந்த சத்யாவுக்கு கைகால் புரியவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லது போல நடந்த களேபரங்களுக்கு இடையே அவள் அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். எப்படியாவது அவள் மனதில் ஒரு இடம் பிடிக்க வேண்டும். கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தை பார்த்தான். "டேய் அவ மனசுல எந்த அளவுக்கு கீழ இறங்க முடியுமோ அந்த அளவுக்கு கீழ இறங்கிருக்க. அவ்ளோ சீக்கிரம் அதை நேரா நிமிர்த்தி வெக்க முடியாது. வேணா முயற்சி பண்ணி பாரு" என்றது அவன் மனம்.
உண்மை தானே. அவளை எப்படி கேவலப்படுத்தி பேச முடியுமோ பேசியாகிவிட்டது. அடிக்கவும் செய்தாகிவிட்டது. இதை எல்லாம் அவள் மறந்து என்னை மன்னித்து அதன் பின் அவளுக்கு பிடித்தவனாகி....அய்யயோ...நினைக்கும் போதே வயதாகிவிடும் போல இருக்கிறதே... இதெல்லாம் நடப்பது என்றால்???? இருந்த சக்தி எல்லாம் வடிந்து போனது அவனுக்கு. பொத்தென்று அமர்ந்தான் இருக்கையில்.
அந்த அறை நல்ல விசாலமாக இருந்தது. முன் கூட்டியே தெரியப்படுத்தி இருந்திருப்பார்கள் போல, இருவருக்கும் இரண்டு கட்டில், மெத்தை என்ற எல்லாம் தயாராக இருந்தது.
"ரூம் பிடிச்சிருக்கா பவி?" லட்சுமி கேட்கவும் தன்னுடைய யோசனையில் இருந்து வெளியே வந்தவள், "நல்லா இருக்குமா தேங்க்ஸ் " என்றாள்.
"உமா, அந்த ரூம் நீ ஸ்டடி ரூமா யூஸ் பண்ணிக்கோ. உனக்கும் டிஸ்டர்பன்ஸ் இருக்காது. அக்காக்கும் டிஸ்டர்பன்ஸ் இருக்காது ஒகே வா?" -லட்சுமி உமாவிடம் கேட்க, "ஹ்ம்ம் சரி. நான் அந்த ரூமை போயி பாக்கலாமா?" என்றாள் சிறு பெண்ணுக்கே உரிய ஆர்வத்துடன்.
"தாராளமா" புன்னகையுடன் லட்சுமி சொல்லவும் அவள் சந்தோசத்துடன் செல்வதை கண்ட பவித்ராவுக்கு "அடலீஸ்ட் அவளாவது சந்தோசமாக இருக்கிறாளே" என்றே தோன்றியது.
"பவி " லட்சுமி அழைக்கவும் அவரை பார்த்தாள் பவித்ரா.
"எப்பவுமே ஏதாவது ஒரு யோசனைல இருக்க. எனக்கு புரியுது இது புது இடம். நான் புதுசு. உனக்கு கொஞ்சம் சங்கடமா தான் இருக்கும். ஆனா உமாவை பாரு. நீ தயங்கி நின்னா அவளும் தயங்கறா. அவ சின்ன பொண்ணு, அவளுக்காகவாது நீ கொஞ்சம் நார்மலா இருக்க ட்ரை பண்ணு" லட்சுமி சொல்வதும் சரி தான் என்ற பட்டது பவித்ராவுக்கு. அக்காவே தயங்கி தயங்கி செல்லும் போது அவளால் அந்த இடத்தோடு ஒட்ட முடியவில்லை.