பவித்ராவுக்கு இதை எப்படி மறந்தோம் என்று குற்ற உணர்ச்சியாக இருந்தது.
"இல்லை பவித்ரா. நீ உன் உடல் சரியானதும் போயி பாரு, ஒன்னும் அவசரம் இல்லை. நீ இப்போ இருக்கியே ஒரு வீட்ல. அந்த வீட்டுக்காரங்க லட்சுமி அம்மா நம்ம ஆஸ்ரமத்துக்கு நன்கொடையா அஞ்சு லட்ஷம் கொடுத்துருக்காங்க. அதையும் சொல்லலாம்னு தான் கூப்பிட்டேன். என் சார்புள்ள அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிடுமா" அவரிடம் பேசி விட்டு வைத்தவள் நன்றியுடன் பார்த்தாள் லக்ஷ்மியை.
"ரொம்ப தேங்க்ஸ் மா. நீங்க செஞ்சது எவ்ளோ பெரிய ஹெல்ப் தெரியுமா? நூற்றைம்பது பெண் பிள்ளைகளுடைய வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்துருக்கீங்கமா" கண்களில் நீர் வர அவரின் கைகளை பிடித்து கொண்டாள் பவித்ரா.
"பவித்ரா நீ இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லனும்னா சத்யாக்கு தான் சொல்லணும். அவன் தான் என் பேருல டொனேஷன் கொடுத்தது. ஒரு நல்ல விஷயத்துக்கு நம்மளால முடிஞ்சதை செய்யும் போது ஒரு மனநிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதி எங்களுக்கு கிடைக்க நீயும் ஒரு காரணம். அதுக்கு நாங்க தான் நன்றி சொல்லணும்" லட்சுமி சொல்லவும் சத்யாவா இதை செய்தான் என்று நம்பமுடியாமல் பார்த்தாள் பவித்ரா.
"அடடா நீ பாக்கற பார்வையை பார்த்தா என் பையன் பயங்கர வில்லன் ரேஞ்சுக்கு ஏதோ உன்கிட்ட பில்டப் கொடுத்து வெச்சுருக்கானு நெனைக்கிறேன்" தாடையை தடவியபடி லட்சுமி சொன்னதை கேட்ட பவித்ராவுக்கு சிரிப்பு வந்தது. வாய் விட்டு சிரித்தாள் பவித்ரா. சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்த சத்யாவுக்கு அவள் சிரித்து இத்தனை நாள் பார்த்ததில்லை என்ற அவனின் ஏக்கம் தீர்க்க அமைந்ததை போல இருந்தது அந்த காட்சி. எங்கே தான் உள்ளே சென்றால் அவள் சிரிப்பதை நிறுத்தி விடுவாளோ என்று அஞ்சியவன் அப்படியே இரண்டு எட்டு பின்னே நகர்ந்து சென்றான்.
அவள் சிரிப்பதையே பார்த்த லட்சுமி அவள் முகத்தை சுற்றி தான் கைவிரல்களால் திருஷ்டி எடுத்தவர், "எவ்வளவு அழகுடைய பவி நீ...அதுவும் சிரிக்கும் போது" என்று சொல்ல அவளின் சிரிப்பு ஸ்விட்சை தட்டியதை போல அணைய, முகம் இருள "அம்மா நான் இதோ வந்துறேன்" என்றவள் எழுந்து அவளின் அறைக்குள் சென்றாள் வேகமாக. அவள் செல்வதையே புரியாமல் பார்த்து கொண்டிருந்தவர் அருகே வந்து அமர்ந்தான் சத்யா.
அவனை பார்த்தவர், "சத்யா, பவித்ரா உண்மையாவே ரொம்ப வித்தியாசமா இருக்கா. நீ அழகுன்னு எந்த பொண்ணுகிட்ட சொன்னாலும் அவளுக்கு கொஞ்சம் பெருமையா இருக்கும், கொஞ்சம் வெட்கம் வரும் இல்லை கொஞ்சம் தலைக்கனமாவது வரணும்.