"நான் முயற்சி பண்றேன் மா. ஆனா இங்க இருந்து போனதும் இந்த வசதி எல்லாம் இல்லாம அவ கஷ்டப்படுவா அது தான் யோசனையா இருக்கு " பவித்ரா சொல்லவும் "இப்போ தான் வந்துருக்க, அதுக்குள்ள கெளம்பறதை பத்தி ஏன் பேசற? இப்போ நீ ரெஸ்ட் எடு மத்ததெல்லாம் அப்பறம் பேசலாம் " என்றவர் நகர, இவளும் அங்கிருந்த கட்டிலில் யோசனையுடன் அமர்ந்தாள்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. காலையிலும் மாலையிலும் உமாவை பள்ளிக்கு அழைத்து செல்லவும் கூட்டி வரவும் காரை அனுப்பி வைத்தான் சத்யா. அவளும் இப்போது ஓரளவு நல்ல இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள். இன்னும் பவித்ராவுக்கு தான் நாட்களை கடத்துவது பெரும் பாடாக இருந்தது.முடிந்தவரை சத்யா வீட்டில் இருக்கும் போது அவள் வெளியே அறையை விட்டு வருவதே இல்லை. ஆனாலும் காலையும் இரவும் உணவு உண்ணும் வேளைகளில் சத்யாவும் இருப்பதால் அவனை அந்த நேரங்களில் தவிர்க்க முடியாது அவளுக்கு சங்கடமாக இருந்தது. இருவரும் பேசாமல் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தாலும் லட்சுமி அதை பற்றி எதுவும் கேட்காமல் இருந்தது அவளுக்கு ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.
இரண்டு நாட்களாக அவனும் காலை வணக்கம் சொல்வதும் இரவு உறங்க செல்லும் முன் அவளிடம் உடல் நிலை குறித்து கேட்பதும் வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால் இரண்டுக்கும் அவளிடம் இருந்து எந்த பதிலும் வராது, இருந்தாலும் விக்ரமாதித்யனை போல அவனும் விடாமல் முயன்று கொண்டு தான் இருந்தான் அவளுடன் பேசவும் அவளை தன்னுடன் பேச வைக்கவும்.
அன்று மாலை அவளும் லக்ஷ்மியும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இல்லை இல்லை எப்போதும் போல லட்சுமி பேசி கொண்டிருந்தார், இவள் அமைதியாக அவர் சொல்வதை கேட்டபடி அமர்ந்திருந்தாள். அவளின் மொபைல் அடிக்கவும் அதை எடுத்து பார்த்தவளுக்கு ஆஸ்ரமத்தின் என்னை கண்டதும் அந்த அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ" -பவித்ரா
"ஹலோ பவித்ரா எப்படி மா இருக்க? முருகன் தான் சொன்னான் உனக்கு ஒடம்பு முடியலைன்னு. இப்போ எப்படி இருக்கு?" - அவளை அழைத்த ஆஸ்ரம நிர்வாகத்தை நடத்தும் பெண் கேட்கவும், "நல்லாருக்கேன் ஆண்ட்டி. சாரி நான் இந்த வீக் அந்த லயன்ஸ் கிளப் தலைவி ஷைலஜா மேடம்ம பார்த்து டொனேஷன் கேக்கணும்னு நெனைச்சேன். முடியலை. நான் நாளைக்கு போயி பாக்கறேன். அது வரைக்கும் சமாளிக்க முடியும்ல."