"கண்டிப்பா இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்ல மாமா, என்னை நீங்க எவ்வளவு புரிஞ்சிக்கிறீங்க, அதேபோல நான் உங்களை புரிஞ்சிக்கலன்னா என்ன பொண்டாட்டி? இதுக்கு மேல ஃபீல் செய்து பேசக் கூடாது. புரிஞ்சுதா?" என்று அவள் மிரட்டலாக கூறவும்,
"ம்ம் கண்டிப்பா நித்தி, மகாராணி சொன்னதுக்குப் பிறகு அதை எதிர்த்து செய்ய முடியுமா? மகாராணி இப்போ தூங்குவீங்களாம், நான் கொஞ்சம் வேலையிருக்கு அதை முடிச்சிட்டு வருவேனாம்," என்று விளையாட்டாக சொல்லிவிட்டு எழுந்து அவனது அலுவலக அறைக்குச் சென்றான்.
உண்மையிலேயே தினமும் தேர்வுக்கு கண் விழித்து படித்தால் உடல் மிகவுமே அசதியாக இருக்கவே, அதிலும் கார்த்திக்கிற்கும் வேலையிருக்கிறது என்பதால் உறங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாள். ஆனால் வெளியில் செல்லவில்லையென்றால் என்ன? நாளையாவது இத்தனை விலகலை போக்கும்விதமாக நடந்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவோடு உறங்கிப் போனாள்.
ஆனால் அடுத்த இரண்டு நாட்களுமே கூட அவனது வேலைப்பளு அதிகமாக தான் இருந்தது. வீட்டிற்கு வருவதற்கே இரவு தாமதமாகி விட, அசதியில் படுத்தது உறங்கி விடுவான். அவனைப் பார்க்கவே நித்யாவிற்கு பாவமாக இருக்கும், இப்படி மூன்று இரவுகள் கழிந்த வேளையில், நான்காம் நாள் மாலை நேரத்திலேயே அவளது அலைபேசிக்கு அழைத்த கார்த்திக்,
"நித்தி ரெடியா இரு. கொஞ்ச நேரத்தில் நான் வீட்டுக்கு வந்துடுவேன். நாம வெளியப் போறோம் சரியா?" என்று சொல்ல,
"எங்க மாமா?" என்று அவள் மகிழ்ச்சியும் ஆவலுமாக கேட்க,
"ஜஸ்ட் இந்த ஒரு நைட் ட்ரிப் தான், காலையில் வீட்டுக்கு வந்துடலாம், அதுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு சீக்கிரம் ரெடியாகு," என்று அலைபேசியிலேயே அவசரப்படுத்த,
எங்கே என்று தெரியவில்லையென்றாலும், "இதோ பத்து நிமிஷத்தில் ரெடியாகிட்றேன் மாமா," என்றவளின் குரலில் கார்த்திக் மகிழ்ச்சியை உணர்ந்தான்.
வீட்டில் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டவர்கள் காரில் பயணித்துக் கொண்டிருக்க, "இன்னும் நீங்க எங்க போறோம்னு சொல்லவே இல்லையே மாமா," என்றுக் கேட்க,
"ஈ.ஸி.ஆர்ல என்னோட ஃப்ரண்டோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு, நீ வேற எங்கேயாச்சும் போலாமான்னு வாய்விட்டு கேட்டுட்டீயா? நீ கேட்டும் கூட்டிட்டுப் போகாம எப்படி? அதிலும் கொஞ்ச நாளாகவே பிஸியா போயிட்டு இருக்கு. அதான் இன்னைக்கு கொஞ்சம் ஈவ்னிங்க்கு