அப்போ நானே உன்னை அனுப்பி வைப்பேன். அதுவரைக்கும் என் மேல சத்தியமா நீ இந்த வீட்டை விட்டு போறதை பற்றி பேச கூடாது"என்றவர் அவளின் கையை எடுத்து தன் தலைமேல் வைத்தார்.
"ஐயோ அம்மா என்ன இது" என வேகமாக தன் கைகளை இழுத்து கொண்டாள் பவித்ரா.
"நீ போயி நிம்மதியா தூங்கு பவிம்மா. நான் சத்யாகிட்ட பேசிட்டு அடுத்து என்னபண்ணலாம்னு பாக்கறேன்" லட்சுமி ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லி தன்னை சம்மதிக்க வைக்கிறார் என புரிந்தது பவித்ராவுக்கு. ஆனால் ஏன்? என் மேல் உண்டான அனுதாபமாக இருக்கலாம் என்று எண்ணியவள் அவளுடைய அறைக்குள் நுழைந்தாள் .
நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த உமாவை பார்க்கும் போது இப்படி எல்லாம் உறங்கவும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் போல என்று எண்ணியபடி வந்து படுக்கையில் கிடந்தாள். ஆனால் தூக்கம் வரவில்லை.
சத்யா லட்சுமி அம்மா சொல்வதற்காக வருவான் தான். ஆனால் அவனை கட்டாயப்படுத்தி உதவி பெறுவது என்னவோ போல இருந்தது பவித்ராவுக்கு. லட்சுமி அம்மா மூலம் அவன் தன்னால் போலீசில் அடி வாங்கியது தெரிந்தது முதல் அவன் மேல் அவளுக்கு இருந்த கோவம் எல்லாம் போயிருந்தது. அவனுக்கு அது எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் என புரிந்தது. அவனுக்கு அவள் மேல் கோவம் வராமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம் என்று எண்ணியவளுக்கு அவன் மேல் அதற்க்கு முன் வரை இருந்த கோவம் மறைந்த போதும் அவளால் லட்சுமி அம்மாவுடன் பேசியதை போல் இயல்பாக அவனுடன் பேச இயலவில்லை. என்றாலும் அவனின் இருப்பை அவள் தவிர்க்கவும் இல்லை. அங்கிருந்து முடிந்தவரை சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்ற எண்ணமும் மாறவில்லை. இப்போது மீண்டும் ஒரு பிரச்சனை. கடவுளே எப்போது தான் இதெல்லாம் தீரும் என்று கடவுளிடம் புலம்புவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
சத்யாவின் அறைக்குள் நுழைந்தார் லட்சுமி. அவர் உள்ளே வந்தது கூட தெரியாமல் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்த சத்யாவை பார்த்தவர், "நீ படிக்கும் போது கூட இப்படி நைட் எல்லாம் இல்லையே?" அவனின் அருகே வந்து அமர்ந்தார் லட்சுமி.
அவரை கண்ட சத்யா லேப்டாப்பை அணைத்து விட்டு அவர் புறம் திரும்பி அமர்ந்தான்.
"கொஞ்சம் வேலை இருந்துச்சும்மா. அதான். என்ன நீங்க இன்னும் தூங்காம இருக்கீங்க? " என்றவனை கூர்மையாக பார்த்தார் லட்சுமி.
"என்னாச்சு சத்யா உனக்கு?" என்ற லக்ஷ்மியின் கேள்வியில் ஒன்றும் புரியாமல் பார்த்தவனை கண்டு சிரித்தார் லட்சுமி.