துடைத்தவன் மெல்ல அவளது நெற்றியில் முட்டினான் ஆதித்யா. தான் இவ்வளவு நேரமும் அவன் பிடியுள் தான் இருக்கிறோம் என்பதனை அறிந்தவள், அவசரமாக அவனிடமிருந்து விலகினாள்.
"என்ன?" அவளது திடீர் விலகலின் தாத்பரியத்தினை உடனடியாக அவனால் கிரகிக்க இயலவில்லை.
"இல்லை...ஒண்ணூமில்லை! நீங்க உங்க ரூமுக்கு போங்க!" தடுமாற்றம், தயக்கம் கலந்து அவள் கூறியவிதம் அவன் இதழோரத்தில் புன்னகையை கொணர்ந்தது. அவளை நோக்கி முன்னேறியவன்,
"ஏன்?என்ன அவசரம்?" என்ற தோரணையில் உறைந்துப் போனாள் மாயா. ஒருவித அச்சம் கலந்த நாணத்துடன் அவள் பின்னோக்கி நகர,அவளை சிறைப்பிடித்தான் ஆதித்யா.
"ஆ..ஆதி! என்ன....இதெல்லாம்?யாராவது பார்த்துவிட போறாங்க!" அவளது அச்சத்தின் காரணம் அவ்வளவுத்தானா என்றிருந்தது அவனுக்கு! புன்னகையுடன் பெருமூச்சினை விட்டவன், அவளிடமிருந்து விலகினான்.
"குட் நைட்!" என்று சிறுப்புன்னகையை விடுத்துவிட்டு, தன் அறையை நோக்கி நடந்தான் அவன். ஏனோ அவளில்லாமல் இனி வாழ்வில்லை என்ற எண்ணமே அவனுள் ஆழ பதிந்திருந்தது. அவன் அப்படி நடந்துச் சென்றதும் மறைவிலிருந்து வெளிப்பட்டனர் தர்மாவும், உடையானும்! இங்கு இவ்வளவு நேரமும் இருந்தது எல்லாம் தான் பெற்ற மகனா என்ற அதிர்விலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.
"சீக்கிரமே இவனுக்கு கல்யாணத்தை முடித்துவிடணும்டா!" என்ற தாயை பரிதாபமாக பார்த்தான் உடையான்.
"இதை நான் எப்போதோ சொல்லிட்டேன். நீங்கத்தான் லேட்டு!" என்றவனின் மனதில் ஏனோ கங்காவின் முகம் நிழலாட தவறவில்லை.
"உனக்கு இப்படி ஏதாவது ரொமான்ஸ் ஸ்டோரி இருக்குதாடா?" சந்தேகமாய் பார்த்தத் தாயிடம் என்னவென்று கூறுவான்? ஆம்..! உள்ளது ஆனால் அவளை ஒரே ஒருமுறை தான் கண்டிருக்கிறேன் என்பதா! இல்லைவே இல்லை என்று சாதிப்பதா? தர்மாவுக்கு உண்மை விளங்காமல் இல்லை. தெரிந்தே தான் மைந்தனிடத்தில் இப்படி ஒரு வினா விடுக்கிறார். எனினும், அதனை அவன் அறிய வேண்டுமே!
"மோவ்..! நீங்க வேற! இது பதினெட்டாவது வருடம் ஞாபகமிருக்கா!" என்றதும் திடுக்கிட்டார் அவர். ஓரிரு ஆண்டுகள் என்றுத் தானே பெரியவன் உரைத்தான் என்றது தாய் மனம்!
"என்னடா உளர்ற?எட்டு வயசுல இருந்தா?" மூச்சே பிடித்துக் கொண்டது அவருக்கு!