"அப்படியெல்லாம் நடக்காது ராகவா! நீ கஷ்டப்படாதே! அவன் நாளைக்கு நம்ம ஊர் கோவிலில் மாலைப்போடுறானாம்! தர்மா வர சொல்லிருக்கா! நீயும் வா, அவனுக்கு இது பதினெட்டாவது வருடமாம்!" என்றதும் தந்தையின் விழிகள் பெருமிதம் கொள்ளவே செய்தன. அவன் வளர்ப்பு நின்றுப்பேசுகிறதல்லவா!
"நான் வரலைம்மா! எனக்கு தை...தைரியம் இல்லை!" நடுநடுங்கின அவர் வார்த்தைகள் செங்கோல் வழுவிய அரசனின் வாயிற்கடைமணியாய்!
"வாடா!ஏதாவது ஒரு மாற்றம் நிச்சயமா நிகழும் நம்பு ராகவா!" தந்தையின் உள்ளம் பரிதவிப்பில் ஆழ்ந்ததை எவர் அறிவார்? பிறப்பிலிருந்தே தனித்து வளர்க்கப்பட்டவன் அவன், நான் தான் தந்தை என்றால் ஏற்பானா? என்னவென்று காரணம் உரைப்பது?உண்மைத் தெரியவந்தால் அவனால் தாங்க இயலுமா? அன்றே அவனைக் கண்டேன், கபடமில்லாத வெள்ளையுள்ளம் அவனது! எவ்வளவு அழகாக தமையனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டான், ஆதியை எதிர்த்து ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை அவன், அவள் எவ்வளவு ஒழுக்கத்துடன் வளர்த்திருக்கிறாள்! எனினும், எவ்வாறு இருவரின் முகம் நோக்குவேன் உடைந்தது மாண்புமிகு மனம்!
"பார்த்திபா!" கையில் எதையோ வைத்துக் கொண்டு வெறிக்க வெறிக்கப் பார்த்திருந்த உடையானின் கவனத்தைக் கலைத்தாள் மாயா.
"அ...அண்ணி! சொல்லுங்கண்ணி!" அவள் வருகையை உணர்ந்தவன் தன்னால் இயன்றவரை அதனை மறைக்க முயன்றான்.
"என்ன குளிரில் உட்கார்ந்து இருக்க?நாளைக்கு சீக்கிரம் எழுந்துக்கணும்ல! என்ன அது கையில?" கேள்விக்கணைகளைத் தொடுத்தாள் அவள்.
"ஐயயே...! அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணி! மதியம் நல்லா தூங்கிட்டேன். அதான் தூக்கம் வரலை! அம்மாக்கூட போய் தூங்குனா தூங்கிடுவேன். இந்தா கிளம்பிட்டேன்!" என்றவனைத் தடுத்தாள் அவள்.
"என்ன அது கையில?" மாயா அவனிடமிருந்து விடை வாங்காமல் விடுவதாக இல்லை. அவனோ மறைத்தப் பொருளை வெளிக்காட்டவே தயங்கினான், ஆண்டாண்டுக் காலமான இரகசியம் அல்லவா!
"அண்ணி..!" தயங்கியவனின் கரத்தைப் பற்றி இழுத்தவள் முகம் கல்லெறிந்த நீரோடையானது.
"என்ன இது?" ஒருசிறிய குச்சியில், ஏதோ ஒரு பொருளினால் செய்த, ஆண் முகம் கொண்ட பொம்மை அது!