இருக்க முடியுது?"
முதியவர் சிரித்தார்.
" என்ன தாத்தா! சிரிக்கிறீங்க?"
" நான் இங்கே இப்ப தனியா இருக்கிறது, நானே தேடிக்கொண்ட வேதனைம்மா! அவனை அந்தக் காலத்திலே, 'நல்லாப்படி! நிறைய படிச்சு அமெரிக்காவுக்கு போய், நல்ல வேலையிலே சேரந்து டாலரிலே சம்பாதித்தால்தான் எனக்குப் பெருமை'னு அவனை இங்கிருந்து விரட்டினதே, நான்தான்! இப்ப எப்படி அவனை நான் குறை சொல்லமுடியும்?"
"தாத்தா! பொழுதுபோக்கா என்ன செய்வீங்க? பேப்பர் படிப்பீங்களா? டி.வி. பார்ப்பீங்களா? புத்தகம் படிப்பீங்களா? அக்கம்பக்கத்திலே இருக்கிறவங்களோட அரட்டை அடிப்பீங்களா?"
"ஏம்மா? உனக்கு பேட்டி எடுக்கிற ரிபோர்ட்டர் உத்தியோகமா? அடுக்கடுக்கா கேள்வி கேட்கிறியே, ....பரவாயில்லே, சொல்றேன்!
காலையிலே நியூஸ்பேப்பர், பத்துமணிக்கு சாப்பாடு, குட்டி தூக்கம், பிற்பகல் ஒருமணிக்கு காபி, கொஞ்சநேரம் புத்தகம், மாலை ஐந்து மணிக்கு வெளியிலே வாக்கிங் போகிறபோது, சந்திக்கிறவங்களோட அரட்டை, ஆறுமணிக்கு வீடு திரும்பினதிலிருந்து ராத்திரி தூங்கறவரையிலும் டி.வி...."
" அப்படின்னா, உலக விவகாரம், நாட்டுநடப்பு, சமூக பிரச்னைகள் எல்லாம் அத்துபடின்னு சொல்லுங்க!"
"வசந்தா! நான் முதல்லே தொழிற்சங்கத்திலே தீவிரமா இருந்தேன், பிறகு ஒரு கலாசார கட்சியிலே சேர்ந்து இலக்கியம் படிச்சேன், சிலகாலம் கதைகள் எழுதி வார இதழ்களுக்கு அனுப்பினேன், தமிழிலே எல்லா முக்கியமான இதழ்களிலும் என் கதைகள் பிரசுரமாகி உள்ளன, இப்ப வயசாகிவிட்டதனாலே, டி.வி. யிலே செய்திகள் கேட்டு தெரிஞ்சிக்கிறேன்....."
" ரொம்ப சந்தோஷமாக இருக்கு, தாத்தா! நான் வந்த வேலைக்கு, உங்களாலே நிறைய உதவி செய்யமுடியும்னு நம்பறேன்."
" அப்படியா?"
" ஆமாம், சில்சீன்னு ஒரு வெப்சைட்டிலே ஒரு நாவல்போட்டி வைச்சிருக்காங்க, முதல் பரிசு ரூபாய் ஐம்பதாயிரம்! அந்த போட்டியிலே கலந்துக்க ஆசையாயிருக்கு! ஒரு நாவலுக்கு அவசியமான நல்ல கரு, நிறைய விவரங்கள், கொஞ்சம் நாட்டுநடப்பு, கொஞ்சம் சமூக பிரச்னைகள், தெரிந்தால் பெரிதும் உதவியா இருக்கும், அதை சேகரிக்கத்தான் வந்திருக்கேன்........"
" அட்வான்ஸ் கங்கிராட்ஸ்! கட்டாயம் அதற்கு என்னால் முடிந்த உதவி உனக்குண்டு. நான்