அவனுக்கு! அதற்கு மேலும் அங்கு இருக்க விரும்பதவராய், மெல்ல நகர்ந்தார் சூர்ய நாராயணன்.
"அப்பா..!அவர் பேசினதை தப்பா எடுத்துக்காதீங்கப்பா!" மருமகளின் ஆறுதல் அவர் கோபத்தினை சற்றே இளக்கியது. ஒரு புன்னகையைப் பூத்து,
"நான்தான் சொன்னேனேம்மா! அவன் என்னை மாதிரின்னு!" என்று பழித்தீர்த்துவிட்டு, தன் மகனை ஒருமுறை உற்று நோக்கிவிட்டு வெளியேறினார் அவர். அவ்வார்த்தைகள் அவன் மனதின் அடியாழம் வரையில் தைத்தன.
"சிவன்யா செத்துட்டா! எப்போ இத்தனை வருடமா வளர்த்தவர்களை விட நேற்று வந்தக் காதல் பெரியதா அவளுக்கு தோணுச்சோ அப்போவே என் பொண்ணு செத்துட்டா! அவளைத் தலை முழுகிடுங்க!" ஒரே கத்தாக கத்தினார் அவளது தாயார் மீனாட்சி.
"இன்னிக்கு என் குடும்ப கௌவரமே போயிடுச்சு! எல்லார் முன்னாடியும் நான் தலைகுனியுற நிலைமைக்கு வர அவ மட்டுந்தான் காரணம்! ஒண்ணு அவளுக்கு காரியம் பண்ணிடுங்க! இல்லைன்னா என்னை கொன்னுடுங்க!" சினத்தின் உச்சத்தினில் தாண்டவமாடினார் அவர்.
"மீனா! அவ நம்ம குழந்தைம்மா!" தன் மனையாளை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றார் உதயக்குமார். எண்ணியது எதுவும் ஈடேறவில்லை என்பதே நிதர்சனம்.
"இன்னும் என்ன பந்தப்பாசம்? நாம வேணாம்னு தானே அப்பா பெயர் தெரியாத அந்த அநாதையை தேடிப் போனா ..."
"மீனா..! வாயை அடக்கு! வரம்பு மீறி பேசுற!" ஆழ்மனதின் ரௌத்திரம் சற்றே எட்டிப் பார்த்தது அவருக்கு!
"என் மேலே ஏன் கோபப்படுறீங்க? நான் பொய்யா சொன்னேன்?தப்பான வழியில பிறந்தவன் தானே அவன்...!" அவரது பேச்சு எல்லை மீறியது.
"நிறுத்து மீனா..!நீயும் தாய் தானே...! 10 மாசம் ஒரு கருவை கர்ப்பத்துல சுமந்தவ தானே! மனசாட்சி இல்லை. ச்சீ...! ஒரு யோக்கியமான பையனை இப்படி காயப்படுத்துற? என்னப்பிறவி மீனா நீ?"
"ஓ...!எவனோ ஒருத்தனுக்காக என்னை மட்டம் தட்டுவீங்களா?"
" எவனோ இல்லை..! என் வீட்டு மருமகன் அவன்! என் மகளை கல்யாணம் பண்ணிக்கப் போறவன்!" அவர் குரலில் கடுமை தெரிந்தது.
"யாருக்குத் தெரியும்! உங்கப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்காமலே குடும்பம் நடத்துறாளோ என்னமோ!" நாவில் நாடியின்றி அவர் வார்த்தைகளை உதிர்த்துவிட கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் உதயக்குமார்.