தமையனின் உடைகள் நிரம்பிய பெட்டகத்துடன் நிற்க, அவரைத் தொடர்ந்து வந்தார் சூர்ய நாராயணன்.
"சித்தப்பா! என்ன இது?" அவரோ ஏதும் பேசாமல் மௌனமாய் நின்றார்.
"அப்பா! எங்கே கிளம்பிட்டீங்க? என்ன இதெல்லாம்?" சிவன்யாவின் பதற்றத்துக்குப் புன்னகைப் பூத்தார் சூர்ய நாராயணன்.
"நம்ம வீட்டுக்கும்மா!" என்ற பதில் இருவரையும் குழப்பியது.
"அப்பா! உங்களுக்கு கோபம் இருந்தா திட்டிவிடுங்கப்பா! இதற்கு என்ன அவசியம்? இதுவும் உங்க வீடுத்தான்பா!" ஏனோ அவ்வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் நல்கின.
"இல்லை கண்ணா! இது கலெக்டர் சாரோட வீடு! நான் இங்கே அவருடைய கெஸ்டா தான் வந்தேன். அப்படியே தான் போயாகணும்! எந்த உரிமையில நான் இங்கே இருக்க முடியும் சொல்லு!" என்ற வார்த்தைகள் உண்மையில் அவனை திடுக்கிட வைத்தன.
"எனக்கானவளும் இங்கே இல்லை! அப்பறம் நான் எப்படி இருக்க முடியும்?நான் கிளம்புறேன்டா! சீக்கிரமே உங்க கல்யாணத்தை முடித்துவிட்டு தான் மறுவேலை பார்க்கணும்!" ஏனோ ஒரு பெரும் பேறு தன்னை நீங்கி செல்ர முயல்வதாய் தோன்றியது அவனுக்கு!
"நேரம் கிடைக்கும் போது அப்பாவை வந்து பாருங்க!" இருவருக்கும் பொதுவாய் கூறியவர், தன் மகனின் முன் நின்று சில நொடிகள் அவனை கூர்ந்துப் பார்த்தார். அவனோ ஏதும் பேசாமல் அதிர்ந்துப் போய் நின்றிருந்தான். செல்ல வேண்டாம் என்று தடுக்க முயன்ற மனதினை அவன் கட்டுப்படுத்துவது தெளிவாகத் தெரிந்தது.
"அசோக்! உன் கோபம் எனக்குப் புரியுது! உன்கிட்ட இதை சொல்ல எனக்கு விருப்பமில்லை. நீ என்ன அவமானப்படுத்தினதுக்காக நான் இதை சொல்லலை. என் தர்மாக்கு நான் கொடுத்த உரிமையை வேற யாருக்கும் நான் கொடுக்கலை!" அவர் வார்த்தைகளை அவனைக் குழப்பியது.
"மதுவும் சரி, அதர்வும் சரி! கட்டாயத்தால மட்டும் தான் என்னுடைய உறவானாங்க! அதர்வும் என் சொந்த இரத்தம் இல்லை." என்ற வார்த்தை திடுக்கிட வைத்தது.
"அவளை நான் கல்யாணம் பண்ணதுக்கு முன்னாடியே நான் படுத்த படுக்கையா ஆயிட்டேன்! அவ கழுத்துல இருக்கிற தாலியை கூட நான் கட்டலை, அவளே தான் கட்டிக்கிட்டா! என் மருமகளை முன்னாடி வைத்துக்கிட்டு இதை நான் பேச விரும்பலை. இருந்தாலும் சொல்றேன்! என்னை செயல்பட விடாம தடுக்க அவ கொடுத்த மருந்து எனக்கு வம்ச விருத்தி செய்யுற தகுதியை இல்லாம செய்துடுச்சு! நம்பிக்கை இல்லைன்னா, அதற்கான ரிபோர்ட்!" என்று சில காகிதங்களை சமர்ப்பித்தார்.