தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 18 - சகி
வாழ்க்கை உண்மையில் விசித்ரமானது! எங்கு எதனை அளிக்க வேண்டுமோ அங்கு அதனை அளிக்காமல் ஆடி அடங்கி ஓய்ந்துத் திரிந்த காலம் எல்லாம் கடந்தப்போது அனைத்தையும் அள்ளி வழங்குகிறது. என்ன வாழ்க்கையோ! மனிதன் சுகத்துக்கங்களை தேடி ஓடுகிறான். நிம்மதியை குறித்து அவன் சிந்திப்பதே இல்லை. எதை நாம் தேடி ஓடுகிறோமோ அது தானே நமக்கு கிட்டும்?
அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் கடந்துப்போனது! இல்லம் திரும்பி இரு நாட்களும் ஆகிவிட்டன. இப்போது நன்றாக பேச முடிகிறது, எனினும் எவருடனும் பேச விருப்பமில்லை. நன்றாக உடலை அசைக்க இயல்கின்றது. எனினும், ஓரிடத்தை துறந்து செல்ல மனமில்லை. தன்னிச்சையாக எழுந்து நடக்க சில நாட்கள் தேவை என்று கூறிவிட்டார் மருத்துவர்! இப்போது சக்கர நாற்காலி ஆற்றும் பணியை ஒரு தடி செய்து கொண்டிருக்கிறது. எனினும், எவர் தயையும் தேவைப்படவில்லை. சகல சௌகரியங்களுடன் வாழ வேண்டியவன், தனிமையில் தன் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். தன் சகலத்திற்கும் அதிபதி ஆனவள் தன்னெதிரே புன்னகையுடன் புகைப்படத்தின் வழி தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதனை எண்ணும் மாத்திரமே நெஞ்சம் அடைத்தது சூர்ய நாராயணனுக்கு! வாலிபம் கடந்து வயோதிகம் வந்த பின்னரே அவள் அருகாமையை அதிகமாக நாடுகிறது மனம்! எனினும் அத்துன்பத்தினைத் தீர்க்க அவள் வர போவதில்லை என்பதே உண்மை! எவ்வளவு வைராக்கியம் கொண்டவள் அவள்! அவள் பவித்ரமான பந்தத்தை பழித்தக் காரணத்துக்காக என்னை இறுதிவரை அவள் காணவே இல்லை.!அவள் தாயை பழித்தீர்க்க நினைத்த தண்டனையாய் என்னை நிரந்தர துயர்கடலில் தத்தளிக்க வைத்துவிட்டாள். இன்றுவரை அக்கடந்தக் கால நினைவுகள் மட்டுமே உயிர்நாடியாய் உதிரம் காத்துக் கொண்டிருக்கிறது. சிந்தனை விளைவாய் எழுந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் சூர்ய நாராயணன்.
"இங்கே என்னப் பண்ணிட்டு இருக்கீங்க?" என்று ஒலித்த வெறுப்பான குரல் அவர் கவனத்தை தர்மாவின் புகைப்படத்திலிருந்து விலக்கியது. அவர் எந்த ஒரு விளக்கமும் அவனுக்கு அளிக்கவில்லை. அதற்கு எவ்வித அவசியமும் இல்லை.
"பண்றதையும் பண்ணிட்டு பாவமாக நடக்க தேவையில்லை." என்ற கூற்று அவரை பலமாக காயப்படுத்தியது. அவள் உயிருடன் இருந்திருந்தால் கண்டித்திருப்பாள்! அவன் கூறுவதிலும் தவறில்லையே, மறுமொழி இல்லை அவரிடத்தில்!
"உங்க பையனும் உங்களை மாதிரியே இருந்தா என்னப் பண்றது!" என்றோ பெருமூச்சுடன் அவள் கூறியது நினைவில் எட்டிப் பார்த்துப் புன்னகையை தந்தது. அவன் எவ்வளவுத் தான்