தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 11 - சகி
நீண்ட நெடும் பயணமானது தொடங்க வேண்டும் என்பதற்கு முதலடியே முதன்மை அடியாக தொடங்குகிறது. உளியானது இறுதி தேவையற்ற பாகத்தினை உடைக்கும் போதே கல்லில் இருந்து சிலையானது உயிர் பெறுகிறது. அதற்காக, உளியின் முதல் அடி தேவையற்றது என்று கூறிவிட முடியாது! வாழ்வென்னும் நெடும் பயணத்தில் வெற்றி கொள்ளும் தருணம் மட்டும் தான் முதன்மையானது என்றுக் கருதினால்...பின் முயற்சிக்கு தான் முக்கியத்துவம் இல்லையா? இங்கு அனைத்தும் முக்கியமானதே! அனைத்தும் உண்டு தனி கௌரவம், அதனை எவர் ஒருவர் வழங்க முனைகிறாரோ அவருக்கே கிட்டுகிறது ராஜயோகம்!
"அப்பா வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு அண்ணி!" என்ற வார்த்தைகள் ஆதித்யாவின் செவிகளில் வட்டமிட்டப்படி இருந்தன. ஆனால்?? அங்கு வந்திருந்ததோ அகிலாண்டேஷ்வரி மட்டுமே! வேறு எவரையும் காணவில்லை. பூஜை தொடங்குவதற்கு சில மணி நேரங்களே காத்துக் கொண்டிருந்தன. அங்கு ஆதித்யாவைத் தவிர வேறு எவரும் உடையானின் மன உளைச்சலை உணர வாய்ப்பில்லை. இளவல் விரும்பிய எண்ணம் உசிதமே! அதில் தீங்கென்பது ஏதுமில்லை. அவனுக்குத் தன் தந்தை யாரென்று தெரிய தேவையில்லை. அவன் வேண்டுவதெல்லாம் அவர் ஆசி மட்டுமே! எத்தனை காலங்களாக அவன் தவமிருக்க வேண்டும் அதற்கு!
"ஆதி..! அத்தை கூப்பிடுறாங்க வாங்க!" என்று உலுக்கினாள் மாயா.
"மாயா..! நான் ஒரு பத்து நிமிடத்துல வந்துவிடுறேன். அம்மாக்கிட்ட கொஞ்சம் சமாளித்துக் கொண்டிரு!" என்று இரகசியம் காக்க கூறினான் ஆதித்யா.
"என்ன?எங்கே போறீங்க?" அவ்வாறு அவன் கூறியதும் சட்டென அச்சம் தொற்றிக் கொண்டது அவளுக்குள்! தர்மாவை சமாளிப்பதா???
"வந்துடுறேன்!" என்றவன் சற்றும் தாமதிக்காமல் நழுவினான். அவன் அவளைத் தவிக்கவிட்டு சென்றுவிட, கைகளைப் பிசைந்துக் கொண்டு நின்றுவிட்டாள் மாயா. ஏன் இப்படியெல்லாம் செய்கிறான்? என்னவென்று கூறுவது??எவரும் அறியாவண்ணம் நழுவியவன் நேராக காரை இராகவனாரின் இல்லம் நோக்கி செலுத்தலானான். அக்கணம் அவனுக்குத் தேவையானது எல்லாம் இளவலில் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதே! அதற்காக எதையும் எதிர்க்கும் துணிவுக் கொண்டான் ஆதித்ய கரிகாலன்.
தாயார் எவ்வளவு உரைத்துமே மகனுக்காகவும் அவர் ஆலயம் நோக்கி செல்லவில்லை. எப்படி அவள் முகத்தினை நோக்குவது என்ற அச்சமே அவரை செல்லவிடாமல் தடுத்தது. குற்றவுணர்வு மேலும் அவரது பெயரை சீர் குலைக்கும் என்று அவர் எதிர்நோக்கவே இல்லை.
"பெரியய்யா!" கங்காவின் குரலில் உலுக்க, சிந்தனை கலைந்தார் இராகவன்.