"நான் போய் பிரகாரத்தைச் சுற்றிட்டு வரேன்!" என்று நகர போனவனைத் தடுத்தனர் இருவர்!
"நானும் வரேன்!" ஒருசேர ஒலித்த மாயா மற்றும் ஆதியின் குரல் ஏன் ஒருசேர பேசிக்கொண்டோம் என்று அவர்களையே திடுக்கிட வைத்தது ஓர் நொடி! இருவரின் எண்ணமுமே தர்மா மற்றும் இராகவனின் தனிமையாக இருந்தது. தமையன் மற்றும் அண்ணியாருடன் மிக பக்தி மார்க்கமாக வலம் வந்தான் உடையான். அவர்கள் தானே அடுத்த தாய், தந்தையர்! வலம் வந்தப்படி இருந்தவன் எதையோ கண்டு அதிர்ச்சியுற்றவனாய் திடீரென நின்றான். என்னவென்று விளக்கம் புரியாமல் குழம்பிப் போய் மற்ற இருவர் அவனை நோக்க, அவன் பார்வையோ உறைந்துப் போய் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தது. அவன் உறைந்திருந்த எதிர் திசையில் நின்றிருந்தது ஒரு பாவை! யாருக்காக இங்கு வந்தானோ அவளே தான் அங்கு! இவ்வளவு நாட்களாய் தேடிய தேடல்களில் மனமிறங்காதவள், இன்றுத்தான் தரிசனம் நல்க வேண்டுமா? உடையானின் பார்வையே தமையனுக்கு ஆயிரம் செய்திகளைக் கூறாமல் கூறியது.
"ம்ஹூம்..! சாமி..மாலை போட்டிருக்கீங்க!" என்ற எச்சரிக்கையில் சுயநினைவுப் பெற்றவனாய்,
"ஆ...! சாமி சரணம்!" என்றான் உடையான். ஒருவேளை அவ்வுரையாடல் சூழ்நிலையை மாயாவிற்கு புரிய வைத்திருக்கலாம்! ஆதியினை நோக்கி, "அவளா?" என்பதாய் விழிகளால் அவள் கேட்க, 'ஆம்..!' என்பதாய் தலையசைத்தான் அவனும்! இருக்கட்டும், இருக்கட்டும்..! இதோ ஒருவழியாய் அவனை சோதிக்கத் தொடங்கியாகிவிட்டது என்று பெருமூச்சுவிட்டிருப்பார் இறைவனும்! ஆயினும், அதுவல்ல அவனது மெய்யான சோதனை என்று எவருமே அறியவில்லை. ஒருவகையில் அவன் விருப்பம் நிறைவேறி இருக்கிறது. ஆயினும், அது நிறைவேறிய காலநிலை தான் உகந்தது அல்ல..! அவன் சந்திக்கப்போவது இனித்தான் ஆரம்பம் ஆகப்போகிறது என்பதனை காலம் மட்டும் கண்டு மௌனமாக இருந்தது. ஆயிரம் இரகசியங்கள் அறிந்தப்போதும், அனைத்தையும் வென்றிருக்கும் போது காலத்தால் சுதந்திரமாய் எதனையும் கூற இயலாதல்லவா! எவ்வளவு பலம் பெற்றவருக்கும் உண்டு இங்கு ஓர் பலவீனம்! ஆழிப்பெருங்கடல் கடக்க முனைவர் தன் பயணத்தைத் தொடங்க விளைவதில்லை எப்பூசலும்! குழப்பங்கள் சூழ்வதெல்லாம் நடுக்கடலில் நாவாயானது சிக்கும்போதுத் தான்! பின்னோக்கியும் செல்ல இயலாது, முன்னேறியும் செல்ல இயலாது. படகானது கரை அடைய வேண்டும் அதற்கு ஓர் வெளிச்சம்! அதனை திசைக்காட்டும் உடுக்களானது நல்குகிறது. மனிதன் தவித்திருக்கும் பொழுதுகளில், திக்கற்ற நிலைகளில் பல நேரங்களில் அச்சத்தின் காரணம் கொண்டு வழிக்காட்டும் ஔியினை கவனிக்கத் தவறுகிறான்.