(Reading time: 6 - 11 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 04 - ரவை

வெளியே வந்த வசந்தா, எங்கு செல்வது, என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தபோது, இடுப்பில் குழந்தையுடன் ஒரு பெண் வசந்தாவின் அருகில் வந்து, " குழந்தை பசியிலே துடிக்குதும்மா! பால் வாங்க, காசு கொடுங்கம்மா!" என கெஞ்சினாள்!

 தாய், சேய் இருவரையும் பார்க்க பரிதாபமாக இருந்தது.

 " ஏம்மா! உனக்கு பசிக்கலையா? நீ சாப்பிட்டாச்சா?"

 " நானும் ரெண்டுநாளா பட்டினிம்மா! ஆனா, இந்த பச்சைக் குழந்தை துடிக்கிறதை பார்க்க முடியலைம்மா, பெற்ற வயிறாச்சே!"

 " ஐயோ பாவம்! என்னோட வாங்க! குழந்தைக்கு பாலும் உனக்கு சாப்பிட உணவும் வாங்கித்தரேன்......"

 " உங்களுக்கேம்மா உபாதை? காசை கொடுத்தா, நான் டீ கடையிலே சாப்பிட்டுக்கிறேம்மா!"

 " இல்லை, நீயும் குழந்தையும் வயிறார சாப்பிடறதை நான் பார்த்தால்தான் எனக்கு நிம்மதியா இருக்கும். வா! என்னுடன்."

 " சொன்னா கேளுங்கம்மா! காசாவே கொடுங்கம்மா!"

 என அவள் கெஞ்சிய நேரத்தில், அவள் பிடரியில் 'பொடேர்' என ஒரு அடி விழுந்தது!

 அடித்தது, ஒரு ரௌடி!

 " ஏன்யா அவளை அடிக்கிறே? பாவம்யா, அவ ரெண்டு நாளா சாப்பிடலைய்யா!"

 " இவளா? நீங்க ஒரு அப்பாவிம்மா! இந்த சிறுக்கி இந்த குழந்தையை காட்டி நிறைய பிச்சை எடுத்து, அந்தக் குழந்தைக்கு ஒரு சொட்டு பால்கூட வாங்கித்தராம, இவளே கொட்டிக்கிறா மூணு வேளை! இந்தக் குழந்தை இவ பெத்ததா இருந்ததா, அப்படி செய்வாளா? வாடகை குழந்தைங்க! எனக்கு ரெண்டு நாளா வாடகை தராம டபாய்க்கிறா..." என்று சொல்லிக் கொண்டே, குழந்தையை அவளிடமிருந்து பறித்துக் கொண்டான்.

 " இத பாருடீ! இனிமே இந்தக் குழந்தையை வாடகைக்கு கேட்டு என்னிடம் வந்து நிக்காதே! இப்ப, வாடகை பாக்கியை எடுடீ!" என பேசிக்கொண்டே, அவள் மடியில் கை வைத்து சேலையை இழுத்தான்.

 கீழே கொட்டின, ரூபாய் நோட்டுகளும் சில்லறைகளும்!

 அவற்றை பொறுக்கிக் கொண்டு ரௌடி குழந்தையுடன் நகர்ந்தான்.

 "பார்த்தியா அம்மா அநியாயத்தை! அவனுக்கு சேரவேண்டிய வாடகை இருபது ரூபாய், அள்ளிக்கிட்டு போறதோ ஐம்பது ரூபா! இதுதாம்மா எங்க பொழப்பு! சரி, கொடுக்கறதை கொடும்மா!"

 வசந்தாவுக்கு என்ன செய்வதென புரியவில்லை!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.