குழந்தையை பட்டினி போட்டுவிட்டு தான் வயிறு புடைக்க சாப்பிட்டவள்மீது இரக்கம் காட்டலாமா, கூடாதா?
வாடகை குழந்தையை தான் பெற்றதாக பொய் சொன்னவள்மீது பரிதாபம் கொள்ளலாமா, கூடாதா?
ரெண்டு நாளாச்சும்மா சாப்பிட்டுன்னு பொய் பேசியவள்மீது அனுதாபமா?
இப்படி வசந்தா சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது, அந்தப் பக்கமாக, டிப்டாப்பாக உடுத்திக்கொண்டு ஒருவன் சென்றதும், அவனிடம் பிச்சை கேட்க, அவன்பின்னே ஓடினாள், பிச்சைக்காரி!
பின்புறமிருந்து சிரிப்பொலி கேட்கவே, வசந்தா திரும்பி பார்த்தாள்.
" ஊருக்கு புதுசா? இதெல்லாம் சகஜமா நடக்கிறதுதாம்மா! அதனாலே, இங்க உள்ளவங்க யார் மனசிலேயும், பரிதாபம், அனுதாபம், கருணை இதெல்லாம் மறைந்தே போச்சும்மா!"
" அவ்வளவு கெட்டுப் போயிடுத்தா உலகம்?"
" ஒரேயடியா அப்படியும் சொல்லிட முடியாது. நல்லதும் நடக்குது. ஆனா, அதெல்லாம் கடல்லே கரைத்த பெருங்காயமா போயிடுதும்மா!"
" அப்படி என்னென்ன நல்லது நடக்குது?"
" ஊருக்கு ஊர் கோவில் கும்பாபிஷேகம், உற்சவம், ஊர்கூடி தேர் இழுப்பது, பள்ளிக்கூடத்திலே பிள்ளைங்களுக்கு மதிய உணவு தருவது, சம்பளமில்லாம படிப்பு சொல்லித் தருவது, ரேஷனிலே ஏழைங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை வினியோகம், பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பணம், வேட்டி சேலை இனாம், தேர்தல்லே ஒரு ஓட்டுக்கு ஏழைங்களுக்கு ஆயிரக் கணக்கிலே பணம் தருவது, மாணவர்களுக்கு பஸ்ஸிலே ஃப்ரீ பாஸ் தருவது, ஏழைங்களுக்கு வீட்டுக்கு வீடு கேஸ் அடுப்பு வினியோகம், காசு வாங்காம மின்சாரம், இப்படி நிறைய நடக்குது..."
" அப்படின்னா, மக்கள் சந்தோஷமா இருக்காங்கன்னு சொல்லுங்க!"
" அதுதான் இல்லே, ஏன்னா, தேவைகளை பெருக்கிக்கிட்டு, கஷ்டப்படுதுங்க, ஏழைங்க!"
" அப்படியா?"
" ஏழைங்கதான் ரஜினி, விஜய், அஜய்னு நடிகர்களின் ரசிகர்களாய், கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை எல்லாம், கியூவிலே நின்னு, நூற்றுக்கணக்கிலே ரூபாயை கொடுத்து டிக்கெட் வாங்கி சினிமா பார்க்கிறாங்க! செல்போன் வாங்கறதுக்கும், ரீசார்ஜ் பண்றதுக்கும், செலவு செய்யறாங்க......முக்கியமா, ஓட்டல்லே காசு செலவு பண்ணி சாப்பிடறாங்க!"