தொடர்கதை - காரிகை - 20 - அமுதினி
பூஜை அறையில் இருந்த லட்சுமி தன் பின்னே நிழலாடுவதை கண்டு திரும்பியவர் அப்படியே சிலையாகி போனார்.
"அம்மா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா " என்ற பவித்ராவின் குரலில் தன்னிலை அடைந்தவர், "மகராசியா இருடா. சாமி ரூம்ல சாமி காலுல விழாம என் காலுல எதுக்குடா" என்றவர் அவளின் தோளில் கைவைத்து அவளை எழுப்பினார். எழுந்தவள் அங்கிருந்த பிள்ளையாரை வணங்கி கன்னத்தில் போட்டு கொண்டாள்.
"அம்மா, மாதா பிதா குரு தெய்வம் அப்படினு சொல்லுவாங்க. எனக்கு இப்போ அம்மா அப்பா ஸ்தானத்துல இருக்குற உங்க காலுல விழுந்தது தான்மா சரி" என்றவள் நெற்றியில் அங்கிருந்த குங்கும கீற்றை வைத்தவர், "மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கடா. இப்படியே எப்பவும் சந்தோசமா இருக்கணும்" என்றார் மனதார.
"அம்மா, நான் அஷ்டலக்ஷ்மி கோவில் வரை போறேன். சத்யாவை அங்க வர சொல்லிருக்கேன்" என்றவள் முகம் அதை சொல்லி முடிக்கும் முன் வெட்கத்தில் சிவந்தது.
அவள் சொல்லாமல் விட்டதை புரிந்து கொண்டவர் முகத்தில் சந்தோஷம் வந்தது. "நல்லா இருக்கனும்டா நீ. எப்பவும் இதே மாதிரி சந்தோஷத்தோட....அது தான் எனக்கு வேணும். உங்க ரெண்டு பேருடைய சந்தோஷம் மட்டும் தான் ஒரு தாயா எனக்கு நிம்மதியை தரும்" அவளை அனைத்து கொண்ட பவித்ராவின் நெற்றியில் இதழ் பதித்தவர் "சரிடா. பார்த்து போ" எனவும் "கேப் புக் பண்ணிருக்கேன் மா" என பவித்ரா சொல்லவும் டாக்ஸி வரவும் சரியாக இருந்தது.
அந்த அஷ்டலக்ஷ்மி கோயில் எப்போதும் போல அமைதியாக இருந்தது. அங்கிருந்த குளத்தின் படிக்கட்டில் அமர்ந்தாள். அந்த குளம் முழுதும் செந்தாமரை பூக்களால் நிரம்பி இருந்தது. அவள் மனதில் ஒரு இனம் புரியாத பரபரப்பு, இல்லை இல்லை ஒரு விதமான குறுகுறுப்பு...ம்ம்ச்...இல்லை...என்ன என்று சொல்ல தெரியவில்லை பவித்ராவுக்கு. அன்று சத்யா அவள் கைகளை தன்னுடைய கைகளுக்குள் வைத்து அவள் கண்களை பார்த்து "நீ என்னோடு இருந்தால் போதும் வேறு எதுவும் எனக்கு வேண்டாம்" என்று சொன்னது இன்றும் அவள் மனதில் தித்திக்க தான் செய்தது.
ஆனால் அவளால் அதற்க்கு அப்படி சாதாரணமாக சரி என சொல்ல இயலவில்லை.
பவித்ரா யோசிப்பதை கண்டவன், "பவி நான் உன்னை வற்புறுத்தலை. ஆனா உனக்காக காத்திருக்கறதுல எனக்கு எந்த வருத்தமோ கஷ்டமோ கிடையாதுன்னு உனக்கு சொல்லிட்டேன். நீ யோசி டைம் எடுத்துக்கோ...ஆனா என் கூடவே இரு..."சத்யா சொல்ல, "டைம் வேணும் சத்யா. ஆனா எனக்காக ஒரு...ஒரு வருஷம் காத்திருப்பீங்களா? அந்த ஒரு வருஷத்துல என் மனசு மாறாம போனாலோ இல்லை உங்க மனசு மாறினாலோ நீங்க உங்க