சீனு தூக்கி அடிக்க அது இவள் நின்றிருக்கும் இடத்திற்கு சற்று மேலாக வந்தது... நம் ஆர்வக்கோளாறு போலார்ட் போல ஒரு எகுறு எகிறி அதை சரியாக கேட்ச் பிடித்தாள்... சற்று நேரத்திற்கு எந்த சத்தமும் இல்லாமல் இருக்க மைத்தி சுற்றும் முற்றும் பார்க்க அங்கு சீனு ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான்...
“சீனுண்ணா நீ அவுட்....”, மைத்தி கத்த
“அடியேய் குள்ள கத்திரிக்கா... நீ எதுக்கு பிடிச்ச... அது four போயிருக்க வேண்டியது... அநியாயமா பிடிச்சுட்டு அவுட்ன்னு வேற கத்தறையா....”
“டேய் ஏண்டா அவளைத் திட்டற... நாலு ரன்தானே எடுத்துக்கோ.... மைத்திக்குட்டி செம்மையா பீல்ட் பண்ற... வந்து எங்ககூட விளையாடறயா....”, பத்ரியின் நண்பன் கேட்க ஆர்வத்துடன் தலையசைத்தாள்...
“டேய் சும்மா இருடா... அவ ஏதோ அகஸ்மாத்தா பிடிச்சா... அதை வச்சுண்டு நீ வேற அவளை ஏத்தி விடாத... மைத்திம்மா நீ ஓரமா உக்காரு... இனி பால் வந்தா எடுக்காத...”, பத்ரி சொல்ல மைத்தியின் முகம் சோகமாகிவிட்டது....
“பரவாயில்லைடா இன்னைக்கு ஒருநாள்தானே அவ விளையாடட்டும்... மைத்தி நீ பீல்ட் மட்டும் பண்ணு சரியா...”, அவள் வருந்துவதை பொறுக்காத சீனு சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்...
சிறிது நேரத்திற்கு எங்கிருந்து பந்து வந்தாலும் அதை பீல்ட் செய்ய, பத்ரியின் நண்பன் கடுப்பாகிவிட்டான்...
“ஏய் மைத்ரேயி... நீ எந்த டீம்க்கு விளையாடற... ஒழுங்கா நம்ம டீம் பசங்க அடிக்கிற பந்தை மட்டும் எடு தெரியுதா....”, தலையாட்டிய மைத்தி அதன்பிறகு முழு கவனத்தையும் விளையாட்டில் செலுத்தினாள்....
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இவர்கள் விளையாட்டு நடந்தது.... அனைவருக்கும் இரண்டு ஓவர் என்று வைத்து விளையாடியது முடிவுக்கு வர வீட்டிற்கு கிளம்பத் தயாராகினர்...
“மைத்தி எப்படி என்ஜாய் பண்ணியா....”
“சூப்பர்ரா என்ஜாய் பண்ணினேன் பீட்டர் அண்ணா... நானும் விளையாடி இருந்தா இன்னும் சந்தோஷமா இருந்து இருக்கும்...”
“அதுக்கென்ன விளையாடேன்... நான் பந்து போடறேன்...”
“டேய் பீட்டர் சும்மா இருடா.. மைத்திம்மா பந்து எங்கயானும் பட்டுட்டா கஷ்டம்... நான் உனக்கு தோட்டத்துல விளையாட சான்ஸ் தரேன்.. சரியா...”