தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 02 - ஜெய்
ஷ்யாமளா பள்ளியிலிருந்து திரும்ப வர வீடே அமைதிப் பூங்காவாக காட்சி அளித்தது... ஒரு நிமிடம் அவருக்கு வீடு மாறி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டோமோ என்று பயந்து விட்டார்.... சாதாரணமாக அவர் வரும்போது மாதவனுக்கும், மைத்ரேயிக்கும் துவந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கும்... தன் மாமியார் போட்டு வைத்திருக்கும் காப்பியை குடித்துவிட்டு அவர்கள் பஞ்சாயத்தை சரி பண்ணி அடுத்து ட்யூஷன் படிக்க வரும் பிள்ளைகளை கவனிக்கவே அவருக்கு நேரம் இருக்கும் ...
இன்று வீடு அமைதியாக இருந்ததுடன் நான்கு முறை சாதாரணமாக கூறி ஐந்தாவது முறை கத்தியபிறகே வீட்டை பெருக்க ஆரம்பிக்கும் மைத்ரேயி இன்று அவர் வருவதற்கு முன் வீட்டை பெறுக்கி, துடைத்து பளிச்சென்று வைத்திருந்தாள்.... எக்ஸ்ட்ராவாக துவைத்த துணிகள் வேறு அழகாக மடிக்கப்பட்டு இருந்தது... ஷ்யாமளாவிற்கு இதை பார்க்கும்போது வயறு சற்று லேசாக கலக்க ஆரம்பித்தது.... என்ன அமர்க்களம் பண்ணிவிட்டு அதை மறைக்க இந்த வேலையெல்லாம் முடித்திருக்கிறாளோ என்று....
ஷ்யாமளா வந்து பத்து நிமிடமாகியும் எந்த சத்தத்தையும் காணும்.... தன் மாமியாரிடம் விவரம் கேட்க அவர் மைத்ரேயி தன் பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடத்தை முடிக்க கீழே சென்றிருப்பதாக கூறி அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார்....
“என்னம்மா இது இன்னைக்கு ஒரே அதிசயமா இருக்கு.... நான் வந்து காட்டுக்கத்தலா கத்தினப்பறம்தானே ஆடி அசைஞ்சு எல்லா வேலையும் செய்வா... அதுலயும் பாதி வேலையை உங்க தலைல வேற கட்டுவா... இன்னைக்கு இவ்ளோ சமத்தா எல்லா வேலையும் முடிச்சுட்டா....”, ஷ்யாமளா கேட்க....
“எல்லாம் கிரிக்கெட் படுத்தற பாடு.... இன்னைக்கு பத்ரிகூட அவன் விளையாடறதை பார்க்க போகணமோ இல்லையோ அதுதான் எல்லா வேலையும் முடிச்சுட்டா....”, காமாட்சி சிரித்தபடியே பதிலளிக்க மாடியில் திபு திபுவென்று யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது....
“அம்மா வந்துட்டியா.... நல்லதா போச்சு... இங்க பாரு எல்லா வேலையும் முடிச்சுட்டேன்... இனிமே என்னை எந்த வேலையும் செய்ய சொல்லாத... நான் போய் ரெடி ஆகணும்.... பத்ரிண்ணா சரியா அஞ்சு மணிக்கு கிளம்பலைன்னா விட்டுட்டு போய்டுவேன்னு சொல்லி இருக்கான்.... அவாளுக்கு இந்த சண்டே மேட்ச் இருக்காம்.... அது வேற டென்ஷனா இருக்கான் அண்ணா.... லேட்டானா அதுக்கும் சேர்த்து கோச்சுப்பான்....”
“சேப்பாக்கத்துல இந்தியா விளையாடறதை பாக்க போன ரகு கூட இத்தனை அலட்டிக்கலைடி... உன்னோட அலட்டல் பெரிய அலட்டலா இல்லை இருக்கு... ஆமாம் அப்படியே கார்த்தால ஆரம்பிச்சா ராத்திரி தூங்கற வரை நீதான் இந்தாத்துல வேலை செஞ்சு கிழிக்கற... செய்யற