தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 10 - ஜெய்
மாவட்ட வாரியான போட்டியாகையால் மைத்தி விளையாடும் அகாடமி தவிர மற்றும் வேறு பல இடங்களிலிருந்தும் வீராங்கனைகளை தேர்வு செய்திருந்தனர்... சென்னை மாவட்டத்திலிருந்து மொத்தம் பதினைந்து வீராங்கனைகள் தெரிவு பெற்றிருந்தனர்.... அதைப் போலவே மற்ற மாவட்டங்களிலும்... மொத்தம் ஆறு அணிகள் இடம் பெற்றிருந்தது.... A பிரிவு B பிரிவு என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றன... ஒரு அணி மற்ற இரண்டு அணிகளுடன் மோத வேண்டும்... ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் மைத்தி இடம்பெற்றிருந்த சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது....
முதலிரண்டு போட்டிகளில் தங்களை வெறும் ஒப்புக்கு சப்பாணிகளாக உட்கார வைத்திருப்பதை பார்த்து மைத்தி, துளசி இருவரும் வருத்தத்துடனேயே அடுத்த போட்டிக்கு வந்திருந்தனர்... அது அரையிறுதி போட்டியாகையால் கண்டிப்பாக தங்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது... ஆனால் அன்றும் தங்களை சேர்க்காமல் இருந்ததை பார்த்து இருவருக்கும் கண்ணில் நீர் முட்டியது...
“என்ன இது மைத்திக்கா... நம்மளை ஒரு விளையாட்டுக்கு கூட சேர்க்கலை... போன வாட்டி அந்த ஸ்கூல் மேட்ச்ல கூட நல்லாத்தானே விளையாடினோம்... நீ மூணு விக்கெட் எடுத்த... நானும் முப்பது ரன் எடுத்தேனே... நான்தானே ரெண்டாவதா நிறைய ஸ்கோர் அடிச்சது... இத்தனைக்கும் என்னை ஆறாவது ஆளாத்தானே இறக்குனாங்க... அப்பறம் ஏன் இந்த வாட்டி சேர்த்துக்கலை...”, துளசி அழுதபடியே மைத்தியிடம் கேட்டாள்...
“அதுதாண்டி நேக்கும் புரியலை.... அதுவும் அந்த மீரா ரெண்டு மேட்ச்லையும் சேர்த்து பத்து ரன்கூட அடிக்கலை... ஆனா மறுபடியும் இந்த வாட்டி சேர்த்திருக்கா... என்னன்னே புரியலை...”,இருவரும் பேசியபடியே ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்கள்.... இருவர் கண்களும் கலங்கியபடியே இருந்தது... சொதப்பலான ஆட்டத்தால் அந்த மேட்ச்சிலும் அவர்களின் அணி தோற்றிருந்தது.... அரையிறுதியில் தோற்றதால் அவர்கள் அணியால் தொடர்ந்து விளையாட முடியவில்லை... இருவரும் சோக முகத்துடன் தங்கள் தந்தையருடன் வீடு திரும்பினர்....
மைத்தி வீட்டிற்கு வந்த பின்னும் சற்று வருத்தத்துடனேயே சுற்றிக் கொண்டிருந்தாள்... ஷ்யாமளா கேட்டும் அவளிடம் எந்த பதிலும் இல்லை... சற்று நேரம் பார்த்த காமாட்சி பாட்டி ரகுவை அழைத்து கூற அவன் மைத்தியை கூட்டிக்கொண்டு கபாலி கோவிலுக்கு சென்றான்... கூடவே பத்ரியும்... கபாலீஸ்வரரைத் தொழுது பின் மூவரும் அங்கிருக்கும் குளக்கரை படிக்கட்டில் வந்தமர்ந்தனர்....
“என்னடா குட்டி ஆச்சு... நீ வந்ததுலேர்ந்து ஒரே சோகமா சுத்திண்டு இருக்கேன்னு பாட்டி