தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்
ராகவ் அந்த பெண்ணை பற்றி கூறிய பிறகு ஒவ்வொரு நாளும் மீண்டும் அவளைப்பற்றி ராகவ் தன்னிடம் பேசுவானா என்று ராமு காத்துக்கொண்டிருந்தார்.
ஒரு வாரம் கடந்தது...
ராகவன் ஃபுட்பால் பிராக்டிஸ்காக கிரவுண்ட்க்கு சென்றான். அங்கு ஓரத்தில் இருந்த ஒரு கல் பெஞ்சில் பூங்குழலி கன்னத்தில் கை வைத்து அமர்ந்துகொண்டு புட்பால் விளையாடுவதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
பெண்கள் விளையாடும் விளையாட்டில் கலந்து கொள்ளாமல் ஓரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் ராகவ்விற்கு என்ன பெண்ணிவள்... எந்த வேலையும் பொறுப்பா செய்ய மாட்டாளோ என்று எண்ணம் தோன்றியது.
தன் பிராக்டிஸ்ஸை தொடர்ந்தான். கிரவுண்டில் இருந்த பீடி மாஸ்டர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக ஃபுட்பால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பூங்குழலி அவர்களில் ஒருவரது கண்ணில் பட்டாள்.
அவர் மற்றொருவரை நோக்கி சார்... அந்த பொண்ணு பிராக்டிஸ் பண்ணாம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காள். அவங்க வீட்டிலிருந்து ஏதாவது கொஸ்டின் கேட்க போறாங்க... அவள இந்த பொண்ணுங்க கூட ஏதாவது ஒரு டீம்ல ஜாயிண்ட் செய்துவிடுங்கள் என்றார்.
அவரோ அவ வீட்ல இருந்து வரல சார்... தெரேசா இல்லத்திலிருந்து வருகிறாள். அவளை ஒரு பாரின் தம்பதியர் தான் படிக்க வைக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ்லையும் சேர்த்து விட்டு இருக்காங்க. விளையாடினாலும் விளையாடா விட்டாலும் யாரும் வந்து கேள்வி கேட்கப்போவதில்லை. நமக்கு பீஸ் வருது. அவளாக விருப்பப்பட்டு கற்றுக்கொண்டால் கற்றுக்கொள்ளட்டும். இல்லனா வேடிக்கை பார்க்கும் நமக்கு என்ன வாங்க.... சூடா ஒரு டீ குடிக்கலாம் என்று சொல்லிவிட்டு மரத்தடியில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து இருவரும் டீ குடிக்க ஆரம்பித்தனர்.
ராகவ் ப்ராக்டிஸை முடித்துவிட்டு வந்தவன் பூங்குழலியை தேடினான். அவளோ அவர்கள் விட்டுவந்த ஃபுட்பாலை எப்படி அடிக்கலாம் என்று தன் காலால் நகர்த்தி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்தவன் ஓங்கி உதைக்க வேண்டும் என்று சொல்லி தன் காலால் ஒரு உதை கொடுக்க ஃபுட்பால் பறந்துபோய் நெட்டுக்குள் விழுந்தது.
ராகவ் பூங்குழலியை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சற்று தொலைவில் இருந்த தன் பேக்கை நோக்கி நடந்தான். அதில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து திறந்து குடிப்பதற்காக வாயருகே கொண்டு செல்லவும் அவனை நோக்கி வந்த பந்து அவன் பாட்டிலை தட்டி விடவும் சரியாக இருந்தது.