தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு
மகாலட்சுமி உறக்கம் வராமல் புரண்டு படுத்தாள். இன்று மாலை கடற்கரையில் நடந்தது அவள் மனதை பாதித்திருந்தது.
இப்போதும் அவன் கையின் அழுத்தத்தை தன் உடலில் உணர்ந்தாள். அத்துடன் அவனது வெறுப்பான பார்வை. அதுதான் அவளை அதிகம் பாதித்திருந்தது.
இத்தனைக்கும் அவள் அவனுடன் எந்த வம்புக்கும் சென்றதில்லை. அவன் எதற்கு தன் மீது இத்தனை கோபத்துடன் இருக்கிறான்? என்று அவளுக்குப் புரியவில்லை.
அவள் வளர்ந்த சூழலில் எல்லாரும் அவளைக் கொண்டாடினர். பெண் வாரிசே இல்லாமல் சாபம் பெற்றது போலிருந்த குடும்பத்தில் அவர்கள் துயரத்தைப் போக்கும் வகையில் பிறந்தவளை குடும்பமே கொண்டாடியது.
ஊரில் பெரிய குடும்பம். அதனால் அவர்கள் வீட்டு வாரிசை ஊரும் கொண்டாடியது. அவள் அறிவால் பள்ளியிலும், கல்லூரியிலும் கொண்டாடப்பட்டாள். அவளது அன்பான அணுகுமுறையால் நட்பு வட்டம் அவளை கொண்டாடியது.
அப்படிப்பட்ட அவளிடம் அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான்?
அவன் ஊரில் தான் இருக்கிறான் என்று நினைத்திருந்தாள். இன்று மட்டுமல்ல. பல முறை அவனை அவள் இங்கே கண்டிருக்கிறாள்.
"என்ன லட்சுமி? தூக்கம் வரலையா?" சுகன்யா புரளும் அவளைப் பார்த்து கேட்டாள்.
"என்னைக் கேட்கறியே நீ தூங்கலையா?"
"ப்ச். தூக்கம் வரலை."
"என்னாச்சு?"
"ஊர் ஞாபகம் வந்துடுச்சு."
மகாலட்சுமி ஊருக்குச் செல்லவில்லை என்றதும் சுகன்யாவும் ஊருக்குச் செல்லவில்லை.
"நான் எத்தனை முறை ஊருக்குப் போயிட்டு வான்னு சொன்னேன். நீதான் கேட்கலை. நான் வேணா கேப் புக் பண்றேன். ஊருக்குப் போயிட்டு வர்றியா?"
"நீ சொன்னப்ப போயிருக்கலாம்தான். அம்மா வக்கிற மீன் குழம்பு மாதிரி இந்த சாந்தாம்மாவை வைக்கச் சொன்னால் அவங்களுக்கு அந்த கைப்பக்குவமே வரலை. அப்புறம் நெத்திலி கருவாட்டுக் குழம்பை அம்மா வைக்கும்போதே தெருவே மணக்கும். அப்புறம் நாட்டுக்கோழி பிரியாணி..." சொல்லிக் கொண்டே சென்ற தோழியை முறைத்தாள்.
"என்ன லட்சுமி முறைக்கிறே?"
"ஏன்டி ஊர் ஞாபகம் வந்துடுச்சுன்னா உன் வீட்டில் உள்ளவங்களை பார்க்காமல் ஏங்கிப் போயிட்டியோன்னு நினைச்சா? நீ பாட்டுக்கு நீந்தறது, பறக்கிறது, ஊர்றதுன்னு எதை எதையோ