கண்ணீரை சொரிந்தன. தாத்தாவிடம் உடனே சொல்லிவிடும் வேகம். தோட்டத்தில் அவளது பெற்றோருடன் அவர் இருப்பதைக் கண்டாள். உடனே ஓடிச் சென்றாள்.
"தாத்தா." என்ற கேவலுடன் அவரை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.
அவனும் பின்னேயே வருவது தெரிந்தது.
திடீரென்று பள்ளியில் இருந்து வந்த பேத்தி அழவும் கந்தசாமி பதட்டமானார்.
"அம்மா. என்னாச்சும்மா? ஏன் அழறீங்க?" கந்தசாமி கேட்டதற்கு அவளால் பதில் கூற முடியவில்லை. இப்போதுதான் தலையில் கொட்டு வாங்கியது போல் ஒரு வலியை உணர்ந்தாள். அவளுக்கு கொட்டியதால் வந்த வலியை விட தன்னை ஒருவன் கொட்டிவிட்டானே என்ற வலிதான் அதிகமாக இருந்தது.
"என்னடாம்மா? ஏன்டா அழறே?"
ராமச்சந்திரனும் பதட்டத்துடன் மகளிடம் கேட்டார்.
"ஏன்டி அழறே? சொல்லித் தொலையேன்." வளர்மதி அதட்டினாள். அவள் அழுகை அதிகமானது.
"வளரு. பிள்ளையை ஏன் அதட்டறே?" ராமச்சந்திரன் மனைவியை கண்டிக்க, கந்தசாமியோ கண்டனத்தைப் பார்வையில் காட்டினார்.
அவர்களுக்கு நேராக அவளால் மகளைக் கடிந்து கொள்ள முடியாது.
அவர்களிடம் அவன் தன்னைக் கொட்டியதை சொல்லிவிடலாமா? என்று அவள் யோசிக்கும்போதே அவன் அவர்களிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னான்.
அதன் பிறகுதான் அவனைக் கவனித்தனர். அவன் அவர்களிடம் என்ன பேசினான் என்று தெரியவில்லை. ஒருவேளை ஐஸ் வாங்கித்தின்றதை சொல்லியிருப்பானோ? அம்மா அடிப்பாளோ? என்ற பயம் அவளுக்கு.
அவர்கள் அவனிடம் எதையோ கூற அதை மறுத்தவாறே அவன் சென்றுவிட்டான். போகும்போது அவளை முறைத்துப் பார்ப்பதையும் செய்துவிட்டுத்தான் சென்றான்.
மறுநாளில் இருந்து அவளது சுதந்திரம் பறிபோயிற்று. வேறு ஒரு ஓட்டுநர் வேலைக்கு வந்திருந்தான்.
பள்ளிக்குச் செல்லும்போது வீட்டில் இருந்து பாட்டியோ, அம்மாவோ, சித்திகளில் எவராவது ஒருவரோ அவளுடன் காரில் வந்து விட்டுவிட்டு மாலை அழைக்க வந்தனர். அவர்களால் வர முடியவில்லை என்றால் அவளது தந்தை கொண்டு சென்று விட்டார்.
அவளால் முன்புபோல் ஐஸ் வாங்கி உண்ண முடியவில்லை.
அன்று அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான்? என்று இப்போதும் அவளுக்குப் புரியவில்லை. எதற்காக அந்த ஓட்டுநர் பாதியில் விட்டுப்போனான் என்றும் அவளுக்குத் தெரியவில்லை. சில